| ADDED : நவ 18, 2025 04:50 AM
பெங்களூரு: “பெங்களூரில் உள்ள 90 சதவீத கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படவில்லை,” என, கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நரேந்திர சாமி குற்றஞ்சாட்டி உள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: பெங்களூரில் உள்ள 90 சதவீத கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படவில்லை. இது, நகரின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்புகளில் ஒன்றாகும். இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மீட்டெடுப்பதற்கும், நீர் மாசுபாட்டை தடுப்பதற்கும் கூட்டு நடவடிக்கை குழு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த குழுவில் கிரேட்டர் பெங்களூரு ஆணைய அதிகாரிகள், பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய அதிகாரிகள் இடம்பெறுவர். இதுகுறித்து முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேச நேரம் கேட்டு உள்ளேன். நேரம் கிடைத்தால் பிரச்னைகள் குறித்து விரிவாக பேசி தீர்வுகள் காணப்படும். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை பொது இடங்களில் திறந்து விடக்கூடாது. அவை நேரடியாக சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். இதை அனைத்து தொழிற்சாலைகளும் பின்பற்ற வேண்டும். தொழிற்சாலைகளில் கழிவுநீர் கையாளும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் நிறுவப்பட வேண்டும். இதுபோன்ற கடுமையான விதிகளை பின்பற்றினால் மட்டுமே நீர் மாசடைவதை தவிர்க்க முடியும். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கர்நாடக மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் நிறுவப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதை முன்னிட்டு இன்று, நாளை பெங்களூரில் கொண்டாட்டங்கள் இருக்கும். இதில், ஐந்து பேருக்கு சுற்றுச்சூழல் விருது வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.