சி.வி.ராமன் மருத்துவமனை வளாகத்தில் புதிய பிளாக்
பெங்களூரு: இந்திரா நகரில் உள்ள சி.வி.ராமன் பொது மருத்துவமனையில், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்படவுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பெங்களூரு இந்திரா நகரில் உள்ள சி.வி.ராமன் மருத்துவமனை சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இது, பெங்களூரின் முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்றாகும். 250 படுக்கை வசதிகள் உள்ளன. தினமும், 500 முதல் 600 வெளிநோயாளிகள் வருகின்றனர். இங்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி சேவைகள் இல்லாததால், நோயாளிகளுக்கு கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டால், ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை உட்பட மற்ற மருத்துவமனைகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் சி.வி.ராமன் மருத்துவமனை வளாகத்தில், புதிதாக தனி பிளாக் கட்டப்பட உள்ளது. கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியில், இந்த மருத்துவமனை கட்டப்பட உள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக் கட்டித்தர, கோல் இந்தியா லிமிடெட் முன் வந்துள்ளது. மருத்துவமனை வளாகத்தில் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இக்கட்டடம் 10,000 சதுர அடியில் கட்டப்படும். கோல் இந்தியா நிறுவனம், புதிய பிளாக் கட்டுவதுடன், அதன் நிர்வகிப்பு செலவையும் ஏற்கும். தேவையான டாக்டர்களை நியமிக்கும். புதிய பிளாக் இதயம், நரம்பியல், சிறுநீரகம் உட்பட, நான்கு பிரிவுகளை கொண்டிருக்கும். ஒரு மாடி கொண்ட இக்கட்டடத்தில், 10 படுக்கைகள் வசதிகள் இருக்கும். இங்கு அறுவை சிகிச்சை செய்து வார்டுகளுக்கு இடமாற்றப்படுவர். வரும் நாட்களில் கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டால், வேறு மருத்துவமனைகளுக்கு சிபாரிசு செய்யாமல், புதிய பிளாக்கில் சிகிச்சை அளிக்கப்படும். இதனால், மற்ற மருத்துவமனைகள் மீதான நெருக்கடி குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.