குடகு என்றால் மலை மாவட்டம். இங்கு 'நிஷானி மொட்டே' என்ற மலை இருப்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. அவ்வளவு அமைதியான, இயற்கை அழகு கொஞ்சும் மலை. கன்னடத்தில் 'மொட்டே' என்றால் 'முட்டை' என்று அர்த்தம். மலையின் உச்சி முட்டை போன்று காட்சி அளிப்பதால், இதனை 'நிஷானி மொட்டே' என்று அழைக்கின்றனர். குடகு மாவட்டம், மடிகேரியில் இருந்து 40 கி.மீ., தொலைவிலும், பாகமண்டலாவில் இருந்து 9 கி.மீ., தொலைவிலும் நிஷானி மொட்டே மலை அமைந்து உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 4,167 அடி உயரத்தில் அமைந்து உள்ளது. மூடுபனி நிறைந்த மலைகள், பசுமையான காடுகள், திறந்தவெளி புல்வெளிகள், அரிய வகை தாவரங்கள், விலங்குகளின் அற்புதமான காட்சிகளுக்கு இந்த இடம் மிகவும் பிரபலமானது. மலையேற்றம், சாகசம் செய்ய விரும்புவோருக்கு ஏற்ற இடம். இங்கு மலையேற்றம் செய்ய, வனத்துறையிடம் முதலில் அனுமதி பெற வேண்டும். அதன்பின், ஷோலா காடுகளுக்கு இடையேயான ஜீப்பில் பயணித்து, பாகமண்டலா சென்றடைய வேண்டும். அங்கிருந்து உங்கள் பயணம் துவங்கும். இந்த மலைப்பாதை அவ்வளவு சுலபமானதாக இருக்காது. எனவே, உங்களுடன் பயிற்சி பெற்ற வழிகாட்டி இருப்பது நல்லது. முகடுகள், பரந்த புல்வெளிகள், நறுமணம் மிக்க காபி தோட்டங்கள், சிறிய ஓடைகளை கடந்து செல்ல வேண்டும். 15 கி.மீ., நடைபயணத்தை முடிக்க, உங்களுக்கு நான்கு முதல் ஆறு மணி நேரமாகும். ஆரம்பத்தில் மலையேற்றும் பகுதி செங்குத்தாக இல்லாமல், எளிதானதாக இருக்கும். செல்லும் பாதையில் அட்டைகள், பாம்புகள், பிற விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என்பதால், கவனமாக இருக்க வேண்டும். கடைசி ஒரு கி.மீ., மலையேற்றம் சற்று சவால் நிறைந்ததாக இருக்கும். நீண்ட துாரம் பயணம் என்பதால், உங்கள் பயணத்தை காலை 9:00 மணிக்கு துவங்கினால், மதியம் 3:00 மணியளவில் மலையின் உச்சியை சென்றடைவீர்கள். மாலை 6:00 மணிக்கு முன்பாக மலையில் இருந்து இறங்குவது நல்லது. குளிர்காலமான அக்டோபர் முதல் பிப்ரவரியில் செல்வது சிறந்தது. 20_Article_0001, 20_Article_0002 மலையேற்றம் செய்ய தலகாவிரி வனவிலங்கு சரணாலயத்தின் நுழைவு வாயில். (அடுத்த படம்) நிஷானி மொட்டோ மலையின் உச்சி. தலகாவிரி வனவிலங்கு சரணாலயத்தின் நுழைவாயில்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்திலும்; ரயிலில் செல்வோர், மைசூரு ரயில் நிலையத்திலும் இறங்க வேண்டும். அங்கிருந்து பஸ், டாக்சி மூலம் பாகமண்டலா செல்ல வேண்டும். அங்கிருந்து டாக்சி மூலம் தலகாவிரி அருகில் உள்ள மலையேற்றப்பகுதி நுழைவு வாயிலுக்கு செல்லலாம். பஸ்சில் செல்வோர், நேராக பாகமண்டலா கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நி லையத்துக்கு செல்லலாம். அங்கிருந்து 9 கி.மீ., தொலைவில் உள்ள தலகாவிரிக்கு பஸ், டாக்சியில் செல்லலாம். - நமது நிருபர் -