உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு

 பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு

பெங்களூரு: சாலை பள்ளங்களை மூடுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, ஜி.பி.ஏ., பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரின் முக்கிய சாலைகளில் உள்ள பள்ளங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், பெங்களூரை சேர்ந்த விஜயன் மேனன் என்பவர், 2015ல் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நேற்று தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி கே.எஸ்.ஹேமலேகா அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் சார்பாக, ஆஜரான வக்கீல், 'பெங்களூரில் கடந்த ஏப்ரல் மாதம் முதல், ஜூன் மாதம் வரை, 10,202 சாலை பள்ளங்கள் மூடப்பட்டு உள்ளன. சாலையில் உள்ள பள்ளங்களை மூடுவது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. இவ்விஷயத்தில் காலக்கெடு வழங்குவது நடைமுறைக்கு சாத்தியமற்றது' என்று வாதிட்டார். நீதிபதிகள்: பெங்களூரில் சாலை பள்ளங்களை மூடுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜி.பி.ஏ., பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது. இதில், ஒவ்வொரு ஆண்டும் எத்தனை சாலை பள்ளங்கள் மூடப்பட்டன; இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என புள்ளிவிபரங்களுடன் விரிவாக தாக்கல் செய்யப்பட வேண்டும். சாலை பள்ளங்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் மரணங்கள்; இது தொடர்பாக பதிவாக வழக்குகள் குறித்த விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் எனநீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !