சாலையில் மரக்கன்றுகள் நட்டு மக்கள் நுாதன போராட்டம்
ஷிவமொக்கா: சேறு சகதியுமான பாதையில் சிரமப்பட்டு பள்ளிக்கு மாணவர்கள் சென்று வர வேண்டியுள்ளது. நல்ல சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி மாணவர்கள் மற்றும் கிராமத்தினர், சாலையில் மரக்கன்றுகள் நட்டு நுாதன போராட்டம் நடத்தினர்.ஷிவமொக்கா, சாகர் தாலுகாவில் உள்ளது ஓசூர் கிராமம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இருப்பினும், கிராமத்தில் சாலை வசதி இல்லை. இதனால், மழைக்காலங்களில் பாதைகள் சேறும், சகதியுமாக காணப்படும்.இந்த பாதைகளில் கஷ்டப்பட்டு நடந்து சென்று 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இதுகுறித்து, கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராமத்தினர் பல முறை புகார் அளித்தும், தீர்வு கிடைக்கவில்லை.இதனால், ஆத்திரமடைந்த கிராமத்தினர் நேற்று பள்ளி மாணவர்களுடன் கொட்டும் மழையில் குடையுடன் மணல் பாதையில், மரக்கன்றுகளை நட்டு பஞ்சாயத்து அலுவலகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.அப்போது, கிராம மக்கள் கூறியதாவது:சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் மாணவர்கள் பள்ளிக்கு சரியாக செல்ல முடிவதில்லை. சேறு நிறைந்துள்ளதால் பைக்கிலும் செல்ல முடியாது. காரில் செல்லும் அளவுக்கு வசதியும் கிடையாது. பாதையில் மரக்கன்றுகள் நட்டு போராட்டம் நடத்தினோம்.உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.