உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெங்களூரு, மைசூரு, மங்களூரில் விரைவில் நிலையான தரவு மையம்

 பெங்களூரு, மைசூரு, மங்களூரில் விரைவில் நிலையான தரவு மையம்

பெங்களூரு: கர்நாடகாவில் தொழில்துறை வளர்ச்சிக்கு, பெங்களூரு, மைசூரு, மங்களூரில் 'நிலையான தரவு மையம்' அமைக்கப்பட உள்ளது. பெங்களூரு சக்தி பவனில் நேற்று முன்தினம், 160வது கே.பி.டி.சி.எல்., நிர்வாக குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், மின் துறை அமைச்சர் ஜார்ஜ், தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், தகவல் தொடர்பு துறை அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகியோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பின் அமைச்சர்கள் கூறியதாவது: கர்நாடகாவில் தொழில்துறை வளர்ச்சிக்கு, பெங்களூரு, மைசூரு, மங்களூரில் 'நிலையான தரவு மையம்' அமைக்கப்படும். பெங்களூரு அருகில் ஹொஸ்கோட்டில், 500 மெகாவாட் திறன் கொண்ட தரவு மையம் அமைக்கப்படும். பாவகடாவில் இருந்து வினியோகிக்கப்படும் சூரிய மின் சக்தி நேரடியாக இங்கு வந்து சேரும். மேலும், ஒரு நாளைக்கு 60 மில்லியன் லிட்டர் நீரை வழங்குவதில், எந்த சிக்கலும் இல்லை என்று பெங்களூரு குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது. இந்நீரை, மூன்றாம் கட்டமாக சுத்திகரிக்கும் பணியை, அந்தந்த தொழில் நிறுவனங்களே மேற்கொள்ளும். பெங்களூரு, மைசூரு, மங்களூரில் அமைய உள்ள மூன்று மையங்களிலும் மொத்தமாக 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் பைகம்பாடியில் கே.ஐ.ஏ.டி.பி., எனும் கர்நாடக தொழில் பகுதி மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான 350 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு தரவு மையம் அமைக்கப்படும். அதுபோன்று மைசூரிலும் இதற்கு தேவையான நிலம் அடையாளம் காணப்படும். இந்த மையங்களில் முதலீடு செய்வோருக்கு, மின்சாரம், குடிநீர் வசதி அமைத்து தரப்படும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விரைவில் முதலீட்டாளர்களுடன் கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை