மெட்ரோ ரயில் பணிகளுக்காக 3,627 மரங்களை வெட்ட திட்டம்
பெங்களூரு: மெட்ரோ ரயில் ஆரஞ்ச் நிற வழித்தடத்தில் ரயில்வே பாதை அமைக்க, 3,627 மரங்களை வெட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. பெங்களூரு மெட்ரோ ரயில் ஆரஞ்ச் வழித்தடம், ஹொசஹள்ளி முதல், கடபகெரே வரை, 12.50 கி.மீ.,க்கு ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதற்காக, அவ்வழியில் உள்ள 3,627 மரங்களை வெட்ட திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி அளிக்கும்படி, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்திடம், பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் அனுமதி கோரி உள்ளது. இது தொடர்பாக ஜி.பி.ஏ.,வின் வனப்பிரிவு வெளியிட்ட அறிக்கை: ஆரஞ்ச் வழித்தடத்தின் ரயில்வே பாதை அமைப்பதற்காக 1,021 பாக்கு மரங்கள் உட்பட 3,627 மரங்களை வெட்டுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. 1976ம் ஆண்டு கர்நாடக மரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, மரங்களை வெட்டுவதற்கு ஆட்சேபனை தெரிவிக்க, வரும் 27ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.