இரண்டு முறை விபத்து ஏற்படுத்தினால் ஓட்டுநர் டிஸ்மிஸ் பி.எம்.டி.சி., போக்குவரத்து தலைமை மேலாளர் எச்சரிக்கை
பெங்களூரு: ''பி.எம்.டி.சி., பஸ் ஓட்டுநர்கள் இரண்டு முறை பஸ் விபத்தை ஏற்படுத்தினால், வேலையில் இருந்து நீக்கப்படுவர்,'' என, பி.எம்.டி.சி., போக்குவரத்து தலைமை மேலாளர் பிரபாகர் ரெட்டி தெரிவித்தார். பெங்களூரில் கடந்த 15 நாட்களில் பி.எம்.டி.சி., பஸ் மோதி ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பொது மக்களிடம் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக, பெங்களூரில் பி.எம்.டி.சி., போக்குவரத்து தலைமை மேலாளர் பிரபாகர் ரெட்டி நேற்று அளித்த பேட்டி: சம்பள உயர்வு கட் பி.எம்.டி.சி., பஸ் ஓட்டுநர், முதன் முறையாக விபத்து ஏற்படுத்தினால், ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுவார். சஸ்பெண்ட் முடிந்த பின், அவருக்கு மீண்டும் ஓட்டுநர் பயிற்சி அளித்து, பணியில் அமர்த்தப்படுவார். இத்துடன் அவருக்கு மூன்று சம்பள உயர்வு நிறுத்தப்படும். இரண்டாவது முறையாக மீண்டும் விபத்து ஏற்படுத்தினால், அவர் பணியில் இருந்து நீக்கப்படுவார். பணியின்போது மொபைல் போன் பேசினால், பி.எம்.டி.சி., பஸ் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்படுவர். மின்சார பஸ் ஓட்டும்போது, ஓட்டுநர்கள் மொபைல் போனில் பேசினால், 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதுடன், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதில், பஸ் ஓட்டுநரின் மொபைல் போன் பறிக்கப்பட்டு, வேறு மையத்துக்கு மாற்றப்படுவார். விபத்துகளை குறைக்கும் வகையில், வரும் 25ம் தேதி முதல் ஓட்டுநர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் விபத்துகளை தடுக்கவும் வழிகாட்டப்படும். அதுபோன்று குடித்துவிட்டு பஸ் ஓட்டினாலும் சஸ்பெண்ட் செய்யப்படுவர். எச்சரிக்கை பி.எம்.டி.சி., பஸ்களில் பயணியர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மழைக் காலம் துவங்கி உள்ளதால், பெங்களூரு சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்குவதுடன், விபத்துகளும் நடக்கின்றன. பயணியர் பஸ்சில் ஏறும்போதும், இறங்கும்போதும் தான் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, மண்டல கட்டுப்பாட்டாளர், மண்டல போக்குவரத்து அதிகாரிகள், மைய மேலாளர்கள், தினமும் காலை, மதியம், மாலை நேரங்களில் பாதுகாப்பாக பஸ் ஓட்டுவது குறித்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வழிகாட்டுதல்கள்
வாகனங்கள் இடையே போதிய இடைவெளி போக்குவரத்து விதிகளை கடைபிடித்தல் தினமும் வாகன பிரேக்குகள், முகப்பு விளக்கு, கண்ணாடியை சுத்தம் செய்யும் கருவி நன்றாக உள்ளதா என்பதை சரி பார்ப்பது வேகத்தடை, சாலைப் பள்ளங்களை கவனித்து ஓட்டுதல் சாலை இறக்கம், வளைவுகளில் பிரேக், இன்டிகேட்டர்கள், பார்க்கிங் லைட்களை பயன்படுத்துதல் வாகனத்தை நிறுத்தும்போது சரியாக விளக்கை ஒளிரவிடுவது பஸ் நிறுத்தத்தில் தான் பஸ்சை நிறுத்த வேண்டும் பஸ் கதவு மூடப்பட்ட பின்னரே, பஸ்சை இயக்க வேண்டும் சிக்னல் இடத்தில் பயணியரை இறக்கவோ, ஏற்றவோ கூடாது பள்ளிகள், மருத்துவமனைகள், வளைவுகள், கூட்டமான பகுதிகளில் கவனமாக பஸ்சை இயக்குதல் முன்னால் செல்லும் வாகனங்களை, இடது புறமாக முந்தி செல்லக்கூடாது மழைக்காலத்தில் நிதானமாக பஸ் ஓட்டுதல்.