புற்றுநோயாளியை கொடூரமாக தாக்கிய போலீசாருக்கு கண்டனம்
யாத்கிர்: வழக்கு விசாரணைக்காக அழைத்து சென்ற புற்று நோயாளியை, போலீசார் கண் மூடித்தனமாக தாக்கி, காலை முறித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. யாத்கிர் நகரின் கெம்பாவி கிராமத்தில் வசிப்பவர் மெஹபூப், 35. இவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாஹில், 38, என்பவருடன் சேர்ந்து விளையாட்டு பொருட்கள் விற்கும் தொழில் செய்து வந்தார். கடந்த, 2-025 ஆகஸ்டில் ஆட்டோவில் சென்ற சாஹில், விபத்தில் உயிரிழந்தார். சம்பவம் நடந்து ஐந்து மாதங்களுக்கு பின், இந்த விபத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, சாஹிலின் நண்பரான மெஹபூபை போலீசார் விசாரணைக்கு வரும்படி அழைத்துள்ளனர். ஆனால், அவர் விசாரணைக்கு வராமல் அலட்சியப்படுத்தினார். இரண்டு நாட்களுக்கு முன், போலீசார் அவரை கண்டுபிடித்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை கண் மூடித்தனமாக தாக்கினர். ஏற்கனவே அவர் ரத்தப்புற்று நோயாளி. அவரை போலீசார் தாக்கியதில் கால் எலும்பு முறிந்தது. அவரை கலபுரகியின் ஜிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். போலீசாரின் செயலை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.