ஜாதி கலவரத்தை தடுத்த போலீசார்
தாவணகெரே: கோவிலுக்குள் நுழைவு விவகாரத்தில் இரு சமூகங்களுக்கு இடையே நடக்க இருந்த ஜாதி கலவரத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். தாவணகெரே மாவட்டம், சன்னகிரி தாலுகாவில் உள்ள பெலலகெரே கிராமத்தில் உள்ள பீரலிங்கேஸ்வரா கோவிலில் நேற்று முன்தினம் திருவிழா நடந்தது. அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த மூன்று பட்டியலின சமூகத்தை சேர்ந்த வாலிபர்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். இவர்கள் தலித் என்ற காரணத்திற்காக கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று கூறி, வேறு சமூகத்தை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து, அவர்கள் பசவபட்டணா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, இரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே ஜாதி கலவரம் ஏற்படும் சூழல் நிலவியது. இது குறித்து, மாவட்ட எஸ்.பி., சேகருக்கு தகவல் அனுப்பப்பட்டது. கலவரம் ஏற்படுவதை தடுக்க இரு சமூக தலைவர்களுக்கு இடையே நேற்று காலை சமாதான பேச்சு கூட்டத்தை போலீசார் நடத்தினர். இதில், எஸ்.பி., சேகர், தாசில்தார் நாகராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த பிரச்னையை கைவிடுமாறு இரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் கூறப்பட்டது. மீண்டும் அடிதடியில் இறங்கினால் பாரபட்சம் பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., சேகர் கூறினார். இதையடுத்து, சமாதான கூட்டம் நிறைவடைந்தது.