பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் ஜாமின் மனு
பெங்களூரு : வீட்டு பணிப்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், பிரஜ்வல் ரேவண்ணா, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், இரண்டாவது முறையாக ஜாமின் மனுத்தாக்கல் செய்துள்ளார். வீட்டு பணிப்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவ்வழக்கு விசாரணை, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் தாக்கல் செய்த ஜாமின் மனுக்களை மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றமும், கர்நாடக உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இதையடுத்து, மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், தள்ளுபடி செய்து, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் முறையிட உத்தரவிட்டது. இதையடுத்து, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு, பிரஜ்வல் இரண்டாவது முறையாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.