மாம்பழத்துக்கு ஆதரவு விலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை
கோலார்: கர்நாடகாவில் சீனிவாசப்பூர் உள்ளிட்ட கோலார் மாவட்டத்தில் அதிக அளவில் மாம்பழங்கள் விளைகின்றன. இங்கு விளையும் மாம்பழங்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். பைரேஸ்வரர் மாம்பழ உற்பத்தியாளர் சங்கத் தலைவர், பி. சீதாராம்ரெட்டி தலைமையில் கோலார் மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவியிடம், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். பின், சீதாராம் ரெட்டி கூறியதாவது: ஒரு டன் மாம்பழங்களை விளைவிக்க, 8,000 முதல், 10,000 ரூபாய் வரை செலவாகிறது. மாம்பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்தால் டன்னுக்கு 4,000, முதல், 5,000 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இதனால், பல விவசாயிகள் மாம்பழங்களை பறிக்காமல், தங்களின் தோட்டங்களிலே விட்டுச் செல்கின்றனர். ஒரு டன் மாம்பழத்திற்கு குறைந்தபட்ச விலையாக 10,000 ரூபாய் நிர்ணயிக்க அரசுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம். கடந்த ஆண்டு மாம்பழ விற்பனையில், இழப்பு ஏற்பட்ட போது, எங்களின் கோரிக்கையை பரிசீலித்து மத்திய, மாநில அரசுகள் ஆதரவு விலையை அறிவித்தன. அதேபோல, இந்த ஆண்டும் ஆதரவு விலையை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.