மேலும் செய்திகள்
துார்வாராத 'செக்டேம்' வனவிலங்குகளுக்கு சிக்கல்
25-Sep-2025
பெங்களூரு: ''கர்நாடகாவில் சில வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வளர்க்கும் கால்நடைகள், வன விலங்குகளால் கொல்லப்பட்டால், இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: மலை மஹாதேஸ்வரா வனவிலங்கு சரணலாயத்தில், கடந்த ஜூன் மாதம், பழிவாங்கும் வகையில், பசுவின் சடலத்தில் விஷம் வைத்து, ஐந்து புலிகள் கொல்லப்பட்டன. இம்மாத துவக்கத்திலும் மற்றொரு புலி விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில், பழங்குடியின மக்களர் வளர்க்கும் கால்நடைகள், வனவிலங்குகளால் கொல்லப்பட்டால் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புலிகள் இறப்பு குறித்து ஏற்கனவே முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. வன விலங்குகளால் தாக்கப்படும் கால்நடைகளுக்கு, வெள்ளத்தால் மரணமடையும் கால்நடைகளுக்கு வழங்கப்படும் அதே தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வனவிலங்கு வாரத்தின் நிறைவு நாளில், முதல்வர் சித்தராமையா அதிகாரப்பூர்வமாக இதை அறிவிப்பார். கால்நடைகள் இறந்தால் மக்கள் கோபப்படுவது இயற்கை. இருப்பினும், வனவிலங்குகளை கொல்வது குற்றமாகும். அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இம்மாதம் 1ம் தேதி சாம்ராஜ் நகரில் புலியை கொன்ற வழக்கில், இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும். எனவே விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
25-Sep-2025