மெட்ரோ மஞ்சள் நிற வழித்தடத்தில் 22 முதல் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு
பெங்களூரு: மெட்ரோ ரயில் மஞ்சள் நிற வழித்தடத்தில் வரும் 22 முதல் 25ம் தேதி வரை மெட்ரோ ரயில் பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு நடத்த உள்ளார்.ஆர்.வி., சாலை முதல் பொம்மசந்திரா வரையிலான, மெட்ரோ ரயில் மஞ்சள் நிற வழித்தடத்தில் ரயில்கள் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் இயக்கப்படும் என, முன்னாள் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் மஹேஸ்வர ராவ் அறிவித்திருந்தார்.ஆனால், இதுவரை மஞ்சள் நிற வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு நடத்தவில்லை. அவர் ஆய்வு நடத்தி, ஒப்புதல் அளித்தால் மட்டுமே ரயில்கள் இயக்க முடியும். இதனால், மெட்ரோ ரயில் சேவை தாமதமாகும் என கூறப்பட்டது.இந்நிலையில், மஞ்சள் நிற வழித்தடத்தில் வரும் 22 முதல் 25ம் தேதி வரை கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு நடத்துவார். 22 முதல் 24 வரை முக்கிய ஆய்வு நடக்கும். 25ம் தேதி செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தின் ஆய்வு நடக்கும் என, மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.கமிஷனர் ஒப்புதல் அளித்தவுடன், மத்திய, மாநில அரசுகளுடன் ஆலோசித்த பின், ரயில் சேவை துவக்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இந்த வழித்தடத்தில் துவக்க விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.