உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எஸ்.சி., பிரிவின் 101 உட்பிரிவுகளுக்கு உள் இடஒதுக்கீடு விவாதம் நடத்த அனுமதி மறுத்ததால் பா.ஜ., வெளிநடப்பு

எஸ்.சி., பிரிவின் 101 உட்பிரிவுகளுக்கு உள் இடஒதுக்கீடு விவாதம் நடத்த அனுமதி மறுத்ததால் பா.ஜ., வெளிநடப்பு

பெங்களூரு : ''எஸ்.சி., சமூகத்தின் 101 உட்பிரிவுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும், நீதிபதி நாகமோகன் தாஸ் அறிக்கையை, அரசு ஏற்று கொண்டு உள்ளது,'' என்று சட்டசபையில், முதல்வர் சித்தராமையா அறிவித்தார். கர்நாடகாவில் எஸ்.சி., சமூகம் வலது கரம், இடது கரம் என்று இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளது. எஸ்.சி., சமூகத்தில் உள்ள 101 உட்பிரிவுகளுக்கு உள் இடஒதுக்கிடு வழங்குவது தொடர்பான பரிந்துரை வழங்க, நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை, நேற்று முன்தினம் நடந்த சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சட்டசபையில் முதல்வர் சித்தராமையா நேற்று அறிக்கையை தாக்கல் செய்து பேசியதாவது: எஸ்.சி., சமூகத்திற்கு உள்இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, அச்சமூகத்தினரை உட்பிரிவுகளாக பிரிக்கும் அதிகாரம் அரசியலமைப்புரீதியாக மாநில அரசுக்கு உள்ளது என்று, உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 12 ம் தேதி, நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையில் அரசு ஆணையம் அமைத்தது. எஸ்.சி., சமூகத்தின் உட்பிரிவினருக்கு வழங்க வேண்டிய உள் இடஒதுக்கீடு தொடர்பாக பரிந்துரை வழங்கும்படி கேட்டு கொண்டோம். அந்த ஆணையம் மாநிலத்தின் ஒரு கோடியே 5 லட்சத்து 9,871 பேரிடம் இருந்து தரவுகளை சேகரித்து அறிக்கை தயார் செய்து, இம்மாதம் 1 ம் தேதி என்னிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை அமைச்சரவை முழுமையாக ஆய்வு செய்தது. அமைச்சரவை கூட்டத்திலும் விவாதித்தோம். சில மாற்றங்களுடன் உள் இடஒதுக்கீடு பரிந்துரை அறிக்கையை, அரசு ஏற்று கொண்டு உள்ளது. வலது, இடது கை வலது கை, இடது கை பிரிவினருக்கு தலா 6 சதவீதமும், மற்ற சமூகத்தினருக்கு 5 சதவீதமும் உள் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆதி கர்நாடகா, ஆதி ஆந்திரா, ஆதி திராவிடா பிரிவுகளின் 4,74,954 பேரை, வலது, இடது கை பிரிவுகளுடன் சமமாக இணைக்க முடிவு செய்து உள்ளோம். 101 உட்பிரிவு மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, பிற விஷயங்களில் வாய்ப்புகள் கிடைக்க சமத்துவம், நியாயத்தை உறுதி செய்யும் நோக்கில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. எஸ்.சி., சமூகத்தினரின் இடம்பெயர்வு, அவ்வப்போது கிடைக்க கூடிய தரவுகளை ஆய்வு செய்து ஜாதிகள் குறித்து அறிக்கை அளிக்க ஆணையம் அ மைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. உள் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்து உள்ளோம். உள் இடஒதுக்கீடு கேட்டு பல ஆண்டுகளாக போராடிய மக்களுக்கு நீதி வழங்குவதில் வெற்றி பெற்று உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். அப்போது குறுக்கிட்ட எ திர்க்கட்சி தலைவர்கள், முதல்வரின் அறிக்கை குறித்து பேச முயன்றனர். இதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர் காதர், அமைதியாக இருக்கும்படி எதிர்க்கட்சியினரை கேட்டு கொண்டார். மீண்டும் சித்தராமையா பேசுகையில், ''உங்களால் செய்ய முடியாததை, நாங்கள் செய்து விட்டோம்,'' என்றார். அப்போது அவையில் இருந்து கிளம்ப முற்பட்டார். அப்போது பா.ஜ., உறுப்பினர்கள் முதல்வர் பயந்து ஓடுவதாக கூறினர். இதற்கு பதில் அளித்த சித்தராமையா, 'எனது அரசியல் வாழ்க்கையில் யாரை கண்டும் பயந்து ஓடியது இல்லை' என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். முதல்வர் வாசித்த அறிக்கை மீது விவாதம் நடந்த, சபாநாயகர் அனுமதி மறுத்ததால், எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி