உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  த்ரோ பாலில் தங்கம் வென்ற ஷாம்பவி

 த்ரோ பாலில் தங்கம் வென்ற ஷாம்பவி

சமீபத்தில் வாரணாசியில் நடந்த, 33வது சப் ஜூனியர் தேசிய அளவிலான த்ரோ பாலில், கர்நாடகாவின் ஏழாம் வகுப்பு மாணவி, கர்நாடகா சார்பில் விளையாடி தங்கப்பதக்கம் வென்றார். ஒரு காலத்தில், நகர்ப்புற சிறார்கள் மட்டுமே, படிப்பு, விளையாட்டு திறனில் சிறந்து விளங்குவர் என்ற கருத்து நிலவியது. ஆனால், தற்போது அவர்களுக்கு போட்டியாக, கிராமப்புற சிறார்களும் விளையாட்டில் கலக்கு கின்றனர். தங்க பதக்கங்களை வென்று ஊருக்கு பெருமை சேர்க்கின்றனர். கிராமங்களில் இருந்து வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் சென்றும் விளையாடி, திறமையை நிரூபிக்கின்றனர். ஊட்டச்சத்தான உணவு, விளையாட்டு பயிற்சியாளர்கள், சாதனங்கள் என, அனைத்து வசதிகளும் கிடைக்கும் நகர்ப்புறத்தினர் சாதிப்பது, பெரிய விஷயம் அல்ல. ஆனால், எந்த வசதியும் இல்லாத கிராமத்தவர் சாதிப்பது, பாராட்ட வேண்டிய விஷயம். இத்தகைய சிறார்களில், ஷாம்பவி என்ற ஆறாம் வகுப்பு மாணவியும் ஒருவர். துமகூரு மாவட்டம், திப்துார் தாலுகாவின் ஹொசஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ஷாம்பவி, 11. கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் இவர், த்ரோ பால் விளையாட்டு வீராங்கனை. மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று கோப்பைகள் வென்றுள்ளார். 2025 டிசம்பர் 26ல், உத்தரபிரதேசத்தின், வாரணாசியில் நடந்த, 33வது சப் ஜூனியர் தேசிய அளவிலான த்ரோ பால் போட்டியில், கர்நாடகா சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஹொசஹள்ளி கிராம அரசு தொடக்க பள்ளியில், 39 மாணவர்கள், நான்கு ஆசிரியர்கள் உள்ளனர். உடற்பயிற்சி ஆசிரியர் இல்லை. தரமான விளையாட்டு அரங்கம், பயிற்சி சாதனங்களும் இல்லை. ஆனால், இப்பள்ளியின் ஷாம்பவி உட்பட, பல மாணவ, மாணவியர் கோக்கோ, த்ரோ பால் உட்பட, பல விளையாட்டுகளில் சாதனை செய்கின்றனர். தாலுகா, மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளனர். இவர்களின் சாதனைக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பரத் படேல், முதுகெலும்பாக நிற்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக, தினமும் அதிகாலை, 5:00 மணிக்கு, மாணவ, மாணவியரை திப்துார் நகரின் கல்பதரு விளையாட்டு அரங்குக்கு வரவழைத்து பயிற்சி அளிக்கிறார். இங்குள்ள பயிற்சியாளர்கள் பிரதாப், பவன், மேகனாவும், மாணவ, மாணவியருக்கு விளையாட்டில் ஊக்கமளிக்கின்றனர். இதுகுறித்து, தலைமை ஆசிரியர் பரத் படேல் கூறியதாவது: அரசு பள்ளி சிறார்களும், விளையாட்டில் பின் தங்கக்கூடாது. நகர்ப்புறத்தினருக்கு சமமாக சாதனைகள் செய்ய வேண்டும். பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த சிறார்களுக்கு, விளையாட்டில் ஊக்கமளித்தால் பல சாதனைகள் செய்வர். அவர்களின் எதிர்காலமும் வளமாகும். இதை மனதில் வைத்து, தினமும் அதிகாலையே சிறார்களை நகர்ப்புற விளையாட்டு அரங்கத்துக்கு அழைத்து செல்கிறேன். அவர்களும் மழை, குளிரை பொருட்படுத்தாமல், ஆர்வத்துடன் பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது, எங்களின் கடமை. இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை