எஸ்.ஐ., அடித்ததால் இடது காது செவிடானது
பேகூர் : வீட்டை காலி செய்வது தொடர்பாக உரிமையாளருடன் ஏற்பட்ட பிரச்னையால், விசாரணைக்கு அழைத்துச் சென்று எஸ்.ஐ., அடித்ததால், வாலிபரின் இடது காது கேட்காமல் போய் உள்ளது. பெங்களூரு பேகூரை சேர்ந்தவர் உதய்குமார், 30. வாடகை வீட்டில் குடும்பத்தினருடன் வசிக்கிறார். வீட்டை காலி செய்வது தொடர்பாக, வீட்டின் உரிமையாளருக்கும், உதய்குமாருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இதனால் உதய்குமார் மீது, வீட்டின் உரிமையாளர் பே கூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சில தினங்களுக்கு முன்பு, பேகூர் போலீஸ் நிலையத்திற்கு உதய்குமார் விசாரணைக்கு சென்றார். பணியில் இருந்த எஸ்.ஐ., புனித், உதய்குமாரை கண்மூடித்தனமாக தாக்கியதுடன், இரு கன்னத்திலும் ஓங்கி அறைந்துள்ளார். 'ஒழுங்காக வீட்டை காலி செய்து விடு. இல்லாவிட்டால் உன் பெயரை ரவுடி பட்டியலில் சேர்த்து விடுவேன்' என, மிரட்டி அனுப்பி உள்ளார். வீட்டிற்கு சென்ற பின், உதய்குமாரின் இடது காது சரியாக கேட்கவி ல்லை. மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது இடது காது கேட்காமல் போனது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவ அறிக்கையுடன், புனித் மீது உயர் போலீஸ் அதிகாரிகளிடம், உதய்குமார் புகார் செய்தார். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமையை, உதய்குமார் நேற்று வீடியோவாக வெளியிட்டுள்ளார்.