வெளிநாட்டில் சிக்கியவர்கள் பாதுகாப்புக்கு சிவகுமார் உறுதி
சிக்கமகளூரு: ''ஈரான், துபாய் உட்பட, பல இடங்களில் கன்னடர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை பாதுகாப்பது அரசின் பொறுப்பாகும்,'' என, துணை முதல்வர் சிவகுமார் கூறினார். சிக்கமகளூரு மாவட்டம், என்.ஆர்.புரா தாலுகாவின், பாலேஹொன்னுாரின் ரம்பாபுரி மடத்துக்கு, துணை முதல்வர் சிவகுமார், நேற்று காலை வந்தார். ஜகத்குரு ரேணுகாச்சார்யா, வீர பத்ரேஸ்வரரை சந்தித்து ஆசி பெற்றார். சிவகுமார் வந்திறங்கிய ஹெலிபேடி ல் குவிந்த ஆதரவாளர்கள், 'அடுத்த முதல்வர் சிவகுமார்' என, கோஷமிட்டனர்.இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின், சிவகுமார் அளித்த பேட்டி: எப்போதும் உழைப்பு நம்முடையது, பலன் கொடுப்பது கடவுள். உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கலாம். மடத்துக்கு வந்துள்ளேன். என்ன நடக்கிறது பார்க்கலாம். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துவதால், ஈரானில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மனித குலத்துக்கு வெற்றி கிடைக்க வேண்டும். உலகம் அமைதியாக இருக்க வேண்டும் என்பது, ரம்பாபுரி சுவாமிகளின் விருப்பமாகும். யுத்தத்தால் பள்ளி சிறார்கள் இறப்பது, மனதுக்கு வருத்தம் அளிக்கிறது. ஈரான், துபாய் உட்பட பல இடங்களில் கன்னடர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை பாதுகாப்பது அரசின் பொறுப்பாகும். அங்கு சிக்கியுள்ள போஜேகவுடா, சீனிவாசை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். கன்னடர்கள் பயப்பட வேண்டியது இல்லை. நானும், முதல்வரும் அங்குள்ள கன்னடர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். வெளியுறவுத் துறையிடம் இருந்து, அதிகாரப்பூர்வமாக தகவல் வந்தவுடன்தான் நடவடிக்கை எடுக்க முடியும். 'ஹெல்ப் லைன்' துவக்க சட்ட சிக்கல் உள்ளது. மாநில அரசு தேவையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கன்னட அமைப்புகளும், வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு தைரியமூட்ட வேண்டும். அனைவரும் அமைதிக்காக ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.