பெங்களூரு சிட்டி மார்க்கெட்டில் ஸ்மார்ட் பார்க்கிங் பணி தீவிரம்
பெங்களூரு: பெங்களூரு சிட்டி மார்க்கெட் எனப்படும் கே.ஆர்., மார்க்கெட்டில் நவீன 'ஸ்மார்ட் பார்க்கிங்' பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன. பணிகளை விரைவாக முடிக்குமாறு ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி முதன்மை ஆணையர் மஹேஸ்வரராவ் அறிவுறுத்தி உள்ளார். பெங்களூரு நகரின் கே.ஆர்., மார்க்கெட், இந்தியாவின் புகழ்பெற்ற பெரிய மொத்த மார்க்கெட்டுகளில் ஒன்று. பூக்கள், பழங்கள், காய்கறிகள் விற்பனைக்கு பிரசித்தி பெற்றது. சிக்கல் முக்கியமான பண்டிகை நாட்களில் பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதும். இங்குள்ள பார்க்கிங் பகுதியை நவீனப்படுத்துவதற்காக, மூடப்பட்டு புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பழைய மற்றும் பயன்படுத்தப்படாத வாகனங்களை அகற்றுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. பெங்களூரு நகரின் மையப்பகுதியில் பார்க்கிங் பிரச்னையை தீர்த்து, வாகனங்களை ஒழுங்காக நிறுத்த உதவும் வகையில் நவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய 'ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம்' உருவாக்க முனைந்துள்ளது. ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தில் 200 கார்கள், 400 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்படுகிறது. பாதுகாப்பிற்காக 67க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. 'பேஸ்மென்ட்' எனப்படும் அடித்தளத்தில் வடிகால் வசதி, மின்சாரம், தீயணைப்பு, பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு நுழைவு- வாசலிலும், வெளியேறும் பகுதியிலும் முழு கண்காணிப்பு முறை அமல்படுத்தப்படுகிறது. 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை விரைவாக நிறைவு செய்யவும், பார்க்கிங் பகுதியின் சுத்தம் மற்றும் பராமரிப்பை உறுதி செய்ய வேண்டுமென ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வரராவ் அறிவுறுத்தியுள்ளார்.