பெங்களூரு குப்பை பிரச்னைக்கு தீர்வு: இன்று கச முக்தா செயலி அறிமுகம்
பெங்களூரு: பெங்களூரில் குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 'கச முக்தா' மொபைல் செயலியை, பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் இன்று அறிமுகப்படுத்துகிறது. பெங்களூரு நகரில் குப்பை பிரச்னை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையமும், பி.எஸ்.டபிள்யூ.எம்.எல்., எனும் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனமும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தற்போது குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 'கச முக்தா' என்ற மொபைல் செயலியை, பி.எஸ்.டபிள்யூ.எம்.எல்., இன்று அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் குப்பை கொட்டப்பட்டு உள்ள இடத்தை படமாகவோ, வீடியோவாகவோ எடுத்து, இந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செலுத்தும் நபருக்கு பரிசு வழங்கவும் திட்டமிட்டு உள்ளது. இது குறித்து பி.எஸ்.டபிள்யூ.எம்.எல்., அதிகாரிகளிடம் விசாரித்தபோது, 'குப்பை அகற்றும் ஒப்பந்தாரர்கள், துப்புரவு தொழிலாளர்கள், மார்ஷல்களுக்கு சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. 'கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி செயலியில் புகார்களை ஆய்வு செய்து, தேவையானவர்களுக்கு உத்தரவு வழங்கி, பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இது தவிர, தெருக்களில் சிறுநீர் கழிப்பதை புகார் தெரிவிப்போருக்கு சன்மானம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. 'இந்த செயலில், கடந்தாண்டே அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சில தொழில்நுட்ப பிரச்னை, துணை முதல்வரின் ஒப்புதல் கிடைக்காததால், நிலுவையில் இருந்தது' என்றனர்.