உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தலித்களுக்காக சலுான் திறந்த மாநில அரசு

 தலித்களுக்காக சலுான் திறந்த மாநில அரசு

கதக்: தலித்களுக்கு முடி திருத்தம் செய்ய, மற்றொரு சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மாவட்ட சமூக நலத்துறை சார்பில், தலித்களுக்காக சலுான் திறக்கப்பட்டுள்ளது. கதக் மாவட்டம் முந்தரகி தாலுகாவின் சிங்கடலுார் கிராமத்தில், ஆண்டுதோறும் வீரபத்ரேஸ்வர சுவாமி உற்சவம் நடக்கிறது. இந்த காலகட்டத்தில் ஹாடப்பதாஸ் சமுதாயத்தினர், தங்களுக்கும், மற்றவர்களுக்கும் முடி திருத்தம் செய்யமாட்டார்கள். இதனால், இந்த காலகட்டத்தில், தலித்கள் பக்கத்து கிராமங்களுக்கு சென்று முடி திருத்தம் செய்து கொள்வர். இதுகுறித்து, தாலுகா அலுவலகம், சமூக நலத்துறை, தாலுகா பஞ்சாயத்துகளுக்கு தலித் சமூக மாணவர்கள் சிலர் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து அரசு தரப்பில், கிராமத்தினரிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தியும், நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் அழுத்தத்துக்கு அடிபணியாத மக்கள், கடைகளை அடைத்து போராட்டமும் நடத்தினர். அதனால் வேறுவழியின்றி, சிங்கடலுார் கிராமத்தில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில், தலித்களுக்காக கடந்த 26ம் தேதி தனியாக சலுான் கடை திறக்கப்பட்டது. இக்கடைக்கு வரும் தலித்களுக்கு, திப்பாபூர் கிராமத்தை சேர்ந்த பசவராஜ் ஹடபடா முடி திருத்தம் செய்கிறார். அதிகாரிகள் கூறுகையில், 'போராட்டம் நடத்தும் மக்கள், மத சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பதால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே, தான் தனியாக சலுான் கடை திறக்கப்பட்டு உள்ளது. இதனால், தலித் சமுதாயத்தினர் அனைவரும் பலன் அடைவர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !