மாணவிக்கு பாலியல் தொல்லை வீட்டு உரிமையாளர் கைது
பெங்களூரு: வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, 60 வயது வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கமலேஷ் குமார், 60. இவர் தனது வீட்டின் மேல்பகுதியை வாடகைக்கு விட்டுள்ளார். இரண்டாவது தளத்தில் ஜெயநகரில் உள்ள தனியார் கல்லுாரியில் பட்டப்படிப்பு படிக்கும், 20 வயது மாணவி தனியாக தங்கியிருந்தார். கடந்த சனிக்கிழமை மாலை மாணவி, தங்கியிருந்த வீட்டுக்கு கமலேஷ் குமார் சென்றார். வீட்டில் நடந்த மறுசீரமைப்பு பணிகளை பார்வையிடுவதற்காக வந்ததாக மாணவியிடம் கூறினார். பின், 'கல்லுாரி வாழ்க்கை எப்படி போகிறது' என, 'நைசாக' மாணவியிடம் அவர் பேச்சு கொடுத்தார். மாணவி கையில் வரைந்துள்ள மெஹந்தியை தொட்டு பார்த்தார். பின், மாணவியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார். இதையடுத்து, மாணவி அவரை தள்ளி விட்டு அங்கிருந்து தப்ப முயன்றார். இருப்பினும், அந்த நபர், 'உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. நான் உன்னுடன் வாழ விரும்புகிறேன்' என்றார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்து, வீட்டை விட்டு வெளியேறினார்.இது குறித்து, அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கமலேஷ் குமார் கைது செய்யப்பட்டதாக போலீசார் நேற்று தெரிவித்தனர்.