விடுதிக்குள் புகுந்த நபரை பிடித்து வைத்த மாணவியர்
சிக்கமகளூரு: மாணவியரின் விடுதிக்குள், அத்துமீறி நுழைந்து அச்சுறுத்திய நபரை, மாணவியரே மடக்கி பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிக்கமகளூரு புறநகரில், அரசு மருத்துவ கல்லுாரியின் மாணவியர் விடுதி உள்ளது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவியர் தங்கியுள்ளனர். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, ஒரு நபர் அத்துமீறி விடுதி வளாகத்தில் நுழைந்து, சந்தேகத்திற்கிடமாக அங்குமிங்கும் நடமாடினார். சத்தம் கேட்டு வெளியே வந்த மாணவியர், அந்த ஆண் நபரை கண்டு கூச்சலிட்டனர். அந்த நபர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார். அவரை மடக்கி பிடித்த மாணவியர், விடுதி ஊழியரிடம் தகவல் கூறி, போலீசாரை வரவழைத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, விசாரித்த போது அவர், உத்தர பிரதேசத்தை சேர்ந்த ராகேஷ், 30, என்பது தெரிந்தது. திருடும் நோக்கில் மாணவியர் விடுதிக்குள் நுழைந்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. விடுதிக்குள் நுழைந்த திருடனை, மாணவியர் துணிச்சலுடன் பிடித்ததை, போலீசார் பாராட்டினர்.