உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தனியார் பள்ளி பஸ் விபத்து உயிர் தப்பிய மாணவர்கள்

 தனியார் பள்ளி பஸ் விபத்து உயிர் தப்பிய மாணவர்கள்

மஹாலட்சுமி லே -அவுட்: தனியார் பள்ளி பஸ்சின் பிரேக் பழுதானதால், மின்கம்பத்தில் மோதியது. இதில், அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர். பெங்களூரு மஹாலட்சுமி லே -அவுட் பகுதியில், நேற்று காலை என்.பி.எஸ்., என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும், 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். சாலையில் சென்று கொண்டிருந்த பஸ்சின் பிரேக் திடீரென பழுதானது. இதனால், அதிர்ச்சி அடைந்த பஸ்சின் ஓட்டுநர், பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால், சாலையில் இருந்த மின்கம்பம் மீது பஸ் மோதியது. இதை பார்த்தவர்கள் உடனடியாக உதவி செய்து, பஸ்சில் இருந்த மாணவர்களை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக, மாணவர்கள் யாருக்கும் பலத்த காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. லேசான காயம் அடைந்தவர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஓட்டுநருக்கும் பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை. தகவல் அறிந்த மல்லேஸ்வரம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். மஹாலட்சுமி லே -அவுட் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., கோபாலையாவும் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின், அவர் கூறியதாவது: பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற சம்பவம் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாகும். பள்ளி பஸ்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை அனைத்து தனியார் பள்ளி நிர்வாகங்களும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி