உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பதவிக்காக பா.ஜ.,விடம் சரண் குமாரசாமியை சாடிய சுர்ஜேவாலா

 பதவிக்காக பா.ஜ.,விடம் சரண் குமாரசாமியை சாடிய சுர்ஜேவாலா

பெங்களூரு: ''மத்திய அமைச்சர் பதவியை காப்பாற்றி கொள்ள, பா.ஜ.,விடம், குமாரசாமி சரண் அடைந்து விட்டார்,'' என்று, கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காமல், முன்னாள் பிரதமர் தேவகவுடாவை, பா.ஜ., அவமதித்துள்ளது. பா.ஜ., தலைமை மீண்டும், மீண்டும் ம.ஜ.த.,வை அவமதிக்கிறது. ஆனால் தேவகவுடாவின் மகன் குமாரசாமி மத்திய அமைச்சர் பதவியை காப்பாற்றி கொள்ள அனைத்தையும் சகித்து கொண்டு பா.ஜ.,விடம் சரண் அடைந்து விட்டார். குமாரசாமியை தனது கட்சியின் அலுவலக பொறுப்பாளர் போன்று பா.ஜ., நடத்துகிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட தேவகவுடா தோல்வி அடைந்தார். அவரை ராஜ்யசபா எம்.பி.,யாக்கியது காங்கிரஸ் தான். முன்னாள் பிரதமருக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுத்து இருப்பதன் மூலம், கர்நாடக மக்களை பா.ஜ., அவமதித்து உள்ளது. ம.ஜ.த.,வும் இவ்வளவு பலவீனமாக இருக்க கூடாது. குமாரசாமி மத்திய அமைச்சராக இருந்தும், தந்தைக்கு சீட் வாங்கி கொடுக்க முடியவில்லை என்றால் என்ன அர்த்தம். ம.ஜ.த., தலைவர்களுக்கு கொஞ்சமாவது சுயமரியாதை இருந்தால் அவர்கள் உடனடியாக பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தக்க பாடம் முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''அரசியல் சதுரங்க ஆட்டத்தில் சிப்பாய் எங்கே வைக்கப்படும் என்று, எங்களால் எப்படி சொல்ல முடியும். ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட தேவகவுடாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது பற்றி நான் கருத்து சொல்ல மாட்டேன்,'' என்றார். காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் கூறுகையில், ''தேவவகவுடாவின் உதவியால் தான் ராஜ்யசபாவில், பா.ஜ., பல மசோதாக்களை நிறைவேற்றியது. ஆனாலும் அவர்கள் தேவகவுடாவை அவமதித்துள்ளனர். வரும் நாட்களில் மக்கள் பா.ஜ.,வுக்கு தக்க பாடம் புகட்டுவர்,'' என்றார். எம்.எல்.ஏ., ரவிகுமார் கனிகா கூறுகையில், ''ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட தேவகவுடாவுக்கு வாய்ப்பு வழங்காததன் மூலம், ஒக்கலிகர் சமூகத்தை பா.ஜ., அவமதித் துள்ளது. தேவகவுடாவுக்கு வாய்ப்பு கொடுக்க மனம் இல்லை என்றாலும், முன்னாள் எம்.பி., சுமலதாவுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம். கட்சி கேட்டு கொண்டதால் தனது தொகுதியை விட்டு கொடுத்த அவரையும் அவமதித்து உள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை