கிராம வளர்ச்சி துறை கமிஷனராக தமிழர் திவ்யா பிரபு பொறுப்பேற்பு
பெங்களூரு: கிராம வளர்ச்சி துறை கமிஷனராக தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி திவ்யா பிரபு பொறுப்பேற்று கொண்டார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி திவ்யா பிரபுவை, கிராம வளர்ச்சி துறை கமிஷனராக நியமித்து நேற்று முன்தினம், கர்நாடகா அரசு உத்தரவிட்டது. பெங்களூரில் உள்ள அலுவலகத்தில் கிராம வளர்ச்சி துறை கமிஷனராக திவ்யா பிரபு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு துறையின் அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். திவ்யா பிரபு தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர். 2014ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், மத்திய அரசின் பணியாளர் மற்றும் பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சக துறை உதவி செயலர். கர்நாடக பொது சேவை ஆணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, மாண்டியா மாவட்ட சி.இ.ஓ., சித்ரதுர்கா, தார்வாட் மாவட்ட கலெக்டராகவும் திறம்பட பணியாற்றியவர். தார்வாட் மாவட்ட கலெக்டராக இருந்த போது, மிஷன் வித்யாகாசி என்ற கல்வி திட்டத்தை செயல்படுத்தி, பலரின் பாராட்டுகளை பெற்றவர்.