மெட்ரோ நிறுவனத்துக்கு தேஜஸ்வி சூர்யா அறிவுரை
பெங்களூரு: 'பெங்களூரு மெட்ரோ நிறுவனம், உலகில் உள்ள மற்ற மெட்ரோ நிறுவனங்களை பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்' என பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா அறிவுரை கூறி உள்ளார்.பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டணம், கடந்த பிப்ரவரியில் 45 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, மெட்ரோ நிர்வாகத்தை பலரும் விமர்சித்தனர். பயணியர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது.இந்நிலையில், பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி., தேஜஸ்வி சூர்யா, 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:பெங்களூரு மெட்ரோ நிறுவனம், உலகில் உள்ள மற்ற மெட்ரோ நிறுவனங்களை பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் மெட்ரோ ரயில் சேவைகள் சிறப்பாக உள்ளன. பொது போக்குவரத்து என்பது சாதாரண விஷயம் இல்லை.மாறாக, பயணியர் நடத்தப்படும் விதம், அவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டது. ஆனால், பெங்களூரில் இவையெல்லாம் கிடைப்பதில்லை.மெட்ரோ நிறுவனம், டிக்கெட் கட்டணம் குறித்த கட்டண நிர்ணயக் குழுவின் அறிக்கையை பொதுவில் வெளியிட வேண்டும். அதை வெளியிடுவதில் என்ன பிரச்னை; ஏன் மறைத்து வைத்துள்ளீர்கள்?இது ஒரு தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஆவணம் இல்லை. இருப்பினும், அதை வெளியிடவில்லை. அறிக்கையை வெளியிட்டால் தானே, கட்டண உயர்வுக்கான உண்மையான காரணத்தை புரிந்து கொள்ள முடியும். பொது போக்குவரத்து என்பது நகர்ப்புறத்தில் மலிவான கட்டணத்தில், திருப்திகரமான சேவையை வழங்குவதே.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.