அரசியலமைப்பு தார்மீக திசைகாட்டி
பெங்களூரு: ''அரசியலமைப்பு ஒரு சட்ட ஆவணம் மட்டுமல்ல; ஒரு சமூக ஒப்பந்தம், ஒரு தார்மீக திசைகாட்டியும் கூட,'' என நீதிபதி சோமசேகர் தெரிவித்தார்.மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சோமசேகருக்கு, பிரிவு உபச்சார விழா, நேற்று நடந்தது. இதில் அவர் பேசியதாவது: அரசியலமைப்பு கடமையை ஏற்கும் இச்சூழலில், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தின் மதிப்புகளை நீதித்துறை பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோன்று நானும் நீதித்துறைக்கு உட்பட்டு நடக்கிறேன்.சட்டத்தின் கண்ணியம், அரசியலமைப்பின் புனிதம் நிலைத்திருக்க, எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். அரசியலமைப்பு ஒரு சட்ட ஆவணம் மட்டுமல்ல; ஒரு சமூக ஒப்பந்தம், ஒரு தார்மீக திசைகாட்டியும் கூடஅரசியலமைப்பு சட்டம், அரசின் அனைத்து துறைகளையும், நீதித்துறையில் சட்டத்தின் ஆட்சியையும் ஒருங்கிணைக்கிறது. மக்களின் உரிமையை பாதுகாக்க, நீதி என்பது சலுகை அல்ல, அது அனைவருக்கும் கிடைக்கும் உரிமை.மணிப்பூர் மக்களுக்காக உழைக்க என்னை தேர்வு செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான கொலீஜியத்துக்கு நன்றி.இவ்வாறு பேசினார்.