பனசங்கரியின் சக்தி வாய்ந்த அம்மன்
பொதுவாக மனிதர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து ஏதாவது கெட்டது நடந்தால், 'நமக்கு யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டனர். அதிலிருந்து விடுபட வீட்டில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும்' என்று பேசுவதை நாம் பார்த்து இருப்போம். பில்லி சூனியத்தை நீக்கும் 100 ஆண்டுகள் பழமையான கோவில் பெங்களூரில் உள்ளது.பெங்களூரில் பனசங்கரி 1வது ஸ்டேஜ் ஆவலஹள்ளி மெயின் ரோடு ஸ்ரீ நகரில் உள்ளது ஸ்ரீ ஜலகேரம்மா, ஸ்ரீ அட்டிலகம்மா கோவில். 100 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் ஜலகேரம்மா, அட்டிலகம்மா, முனீஸ்வரா சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. பக்தர்களால் மிகவும் சக்தி வாய்ந்த கோவில் என்று நம்பப்படுகிறது.இந்த கோவில் வளாகத்திலேயே கைரேகை, ஜாதகம் பார்ப்பது, தீய சக்திகளை விரட்டுவதற்கான பரிகாரங்களை செய்யும் ஜோதிட மையமும் உள்ளது.இதனால் பில்லி சூனியத்திலிருந்து விடுபடவும், வாழ்க்கையில் நிலவும் பிரச்னைகள் தீர்ந்து போகவும் தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். பனசங்கரி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த கோவிலுக்கும் வந்து செல்வதை வழக்கமாக வைத்து உள்ளனர்.கோவிலின் நடை தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும். மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து பனசங்கரி ஸ்ரீநகருக்கு பி.எம்.டி.சி., பஸ்கள் நம்பர் 36, 37 இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயிலில் செல்வோர் பனசங்கரி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ மூலம் கோவிலை அடையலாம். -- -நமது நிருபர் - -