செயின்ட் மேரிஸ் தீவுக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை
உடுப்பி : பிரசித்தி பெற்ற மல்பே கடற்கரையின் செயின்ட் மேரிஸ் தீவில் சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியாமல் அங்கு செல்லும் சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.உடுப்பியின், மல்பே கடற்கரை பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக கடல் நடுவில் அமைந்துள்ள செயின்ட் மேரிஸ் தீவு, வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கு விருப்பமான இடமாகும். கோடை விடுமுறையில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தந்தனர். சில நாட்களாக உடுப்பியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்கிறது; கடலும் சீற்றம் அடைந்துள்ளது. மல்பே கடற்கரையில் இருந்து, செயின்ட் மேரிஸ் தீவை சென்றடைய, படகில் 7 கி.மீ., துாரம் பயணிக்க வேண்டும். காற்று பலமாக வீசுவதால் சுற்றுலா பயணியரின் பாதுகாப்பை மனதில் கொண்டு, கடற்கரையில் நீர் விளையாட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளன.மல்பேவில் உள்ள மிதக்கும் பாலம் அகற்றப்பட்டுள்ளது. செயின்ட் மேரிஸ் தீவுக்கு செல்லவும், சுற்றுலா பயணியருக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தகவல் அறியாமல் வரும் சுற்றுலா பயணியர், ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். செயின்ட் மேரிஸ் தீவுக்கு செல்ல வேண்டுமானால், செப்டம்பர் 15 வரை காத்திருக்க வேண்டும்.ஜூன் 1ம் தேதிக்கு பின், மழை தீவிரமடையும் என்பதால், மல்பே கடற்கரையிலும் சுற்றுலா பயணியருக்கு அனுமதி கிடைக்காது.