மக்கள் தொகை கணக்கெடுப்பு அரசு ஊழியர்களுக்கு பயிற்சி
தங்கவயல்: தங்கவயலில் வருவாய்த்துறை, நகராட்சி, கல்வித்துறை சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பை டிஜிட்டல் முறையில் நடத்த பயிற்சி முகாம், தங்கவயல் ராபர்ட் சன் பேட்டையில் உள்ள மஹாவீர் ஜெயின் கல்லூரியில் நடந்தது. கர்நாடக அரசு 2026- - 27ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துகிறது. தங்கவயலில் தாசில்தார் பாரத், நகராட்சி ஆணையர் ஸ்ரீதர், வட்டார கல்வி அதிகாரி நாராயணசாமி ஆகியோர் இணைந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வருவாய்த் துறை, நகராட்சி, கல்வித் துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தினர். தாசில்தார் பாரத் கூறுகையில், ''மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 190 குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும் 250 வீடுகளில் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். மூன்று மாதத்தில் இப்பணிகளை முடிக்க வேண்டும். கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய வேண்டும்,'' என்றார்.