துங்கபத்ரா அணை மதகுகள் வரும் நவம்பரில் மாற்றம்
கொப்பால்: வரும் நவம்பரில் துங்கபத்ரா அணையின் மதகுகளை மாற்றி அமைக்கும் பணிகள் நடக்கும் என கன்னட, கலாசார அமைச்சர் சிவராஜ் தங்கட்கி தெரிவித்துள்ளார். கொப்பால் மாவட்டம், ஹொஸ்பேட்டில் உள்ளது, துங்கபத்ரா அணை. இந்த அணையிலிருந்து வரும் தண்ணீரை நம்பியே கொப்பால், ராய்ச்சூர், பல்லாரி, விஜயநகரா ஆகிய மாவட்டங்களில் உள்ளவிவசாயிகள் இருக்கின்றனர். அணையின் ஏழு மதகுகள் மோசமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியது. இதனால், மதகுகள் உடைந்து எப்போது வேண்டுமானாலும் வெள்ளம் ஏற்படலாம் என்ற விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, அணையில் உள்ள 33 மதகுகளையும் மாற்ற வேண்டும் என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் வலியுறுத்தினார். இதுகுறித்து, கொப்பால் மாவட்ட பொறுப்பு அமைச்சரும்,கன்னட, கலாசார அமைச்சருமான சிவராஜ் தங்கட்கி கூறியதாவது: வரும் நவம்பர் மாதம் துங்கபத்ரா அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படும். விவசாயிகளுக்கு பயிர் செய்வதற்காக தண்ணீர் திறக்கப்படாது. அணையில் உள்ள மதகுகளை மாற்றி அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. வரும் நவம்பர் இறுதியில் அணையில் உள்ள அனைத்து மதகுகளும் மாற்றியமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.