உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அதிகாலை டீ குடிக்க வந்தவரை போதையில் கொன்ற இருவர்

 அதிகாலை டீ குடிக்க வந்தவரை போதையில் கொன்ற இருவர்

மைசூரு: குடிபோதையில் சண்டை போட்டு, டீ குடிக்க வந்தவரை கத்தியால் குத்திக் கொன்று தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். மைசூரு நகரின் சாந்தி நகரை சேர்ந்தவர் சுபியான், 19. நேற்று அதிகாலை 5:40 மணியளவில் தொழுகைக்காக சென்றார். தொழுகை முடிந்த பின், அருகில் உள்ள டீ கடைக்கு டீ குடிக்க சென்றார். அங்கு குடிபோதையில் வந்த இருவர், சுபியானிடம் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றி சுபியானை, இருவரும் கத்தியால் மார்பு, முதுகில் சரமாரியாக குத்திவிட்டு தப்பினர். படுகாயம் அடைந்த அவருக்கு உதவ அங்கிருந்தவர்கள் முன்வரவில்லை. உயிருக்கு போராடிய அவர், அங்கேயே உயிரிழந்தார். சம்பவம் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. தகவல் அறிந்த உதயகிரி போலீசார் அங்கு வந்து, உடலை மீட்டனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கின்றனர். சுபியான் தாய் ஷாஹின் தாஜ் கூறுகையில், ''கஞ்சா மற்றும் போதைப் பொருள் பயன்படுத்திய மர்ம நபர்கள், எங்கள் மகனை கொன்றுள்ளனர். சாந்தி நகரில் போதை குற்றச்செயல் அதிகரித்து வருகிறது. 18 வயதுக்கு உட்பட்டவர்களும் கூட போதை, கஞ்சா பொருட்களை பயன்படுத்துகின்றனர். தினமும் இளைஞர்கள் போதையில் சுற்றுகின்றனர். ''காலை நமாஸ் முடித்து டீ கடைக்கு சென்றவனை, மதுபோதையில் குத்திக் கொலை செய்துள்ளனர். என் மகனின் சாவுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை