மேல்சபை துளிகள்
* கல்யாண கர்நாடகாவில் புதிய விமான நிலையம் பா.ஜ., உறுப்பினர் ஒய்.எம்.சதீஷ் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் எம்.பி.பாட்டீல் பதில்: கல்யாண கர்நாடகாவில் புதிய விமான நிலையம் கட்டுவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் பல்லாரி, விஜயபுரா, கொப்பால் ஆகிய மூன்று மாவட்டத்தை சேர்ந்த மக்களும் பயன்பெறுவர். அதுபோல, விஜயபுரா, பாகல்கோட் ஆகிய மாவட்டங்களில் சிமென்ட், சர்க்கரை தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் அமைப்பது தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். * அசுத்த தண்ணீருடன் சூரஜ் ரேவண்ணா அசுத்தமான தண்ணீர் அடங்கிய தண்ணீர் பாட்டிலை உறுப்பினர்கள் முன்பு காட்சிப்படுத்திய ம.ஜ.த., - எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணா பேசியதாவது: ஹாசன் மாவட்டத்தின் கவுசிகா கிராமத்தில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுகின்றன. இதனால், ஆழ்துளை கிணறுகள், நிலத்தடி நீர் மாசுபடுகிறது. நான் வைத்துள்ள அசுத்தமான தண்ணீர் பாட்டில், அந்த கிராமத்து மக்கள் குடிக்கும் நீரே. இதை குடித்தால், அவர்களின் உடல் நலம் என்ன ஆகும். எனவே, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். * சட்ட விரோத நிலம் அமைச்சர் மறுப்பு பா.ஜ., உறுப்பினர் அருணின் கேள்விக்கு, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பைரதி சுரேஷ் அளித்த பதில்: மாநிலம் முழுதும் 100 இடங்களில் காங்கிரஸ் அலுவலகங்கள் அமைப்பதற்கு சட்ட விரோதமாக நிலம் எதுவும் ஒதுக்கப்படவில்லை. நிலத்திற்கு அனுமதி வழங்குவதிலும் சட்டத்தை மீறவில்லை. இவ்வாறு அவர் கூறினார். *மெஜஸ்டிக்கில் சர்வதேச பஸ் நிலையம் காங்., உறுப்பினர் நாகராஜு யாதவ் கேள்விக்கு போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அளித்த பதில்: பெங்களூரில் சர்வதேச பஸ் நிலையம் அமைக்கப்படும். சிங்கப்பூரை விட சிறந்த பஸ் நிலையமாக அமையும். இந்த பஸ் நிலையம் மெஜஸ்டிக் பகுதியில் அமைக்கப்படும். 'புராஜக்ட் மெஜஸ்டிக்' என்ற பெயரில் திட்டமிடப்படுகிறது. நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு பின் பஸ் நிலையம் கட்டுவது தொடர்பாக முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.