| ADDED : நவ 20, 2025 03:58 AM
பெங்களூரு: விதான் சவுதா முன், வாலிபரை தாக்கி பணம், மொபைல் போன் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு, அம்பேத்கர் வீதியில், கர்நாடக அரசின் அதிகார மையமான விதான் சவுதா உள்ளது. இதற்கு எதிரில் உயர் நீதிமன்றமும், மெட்ரோ ரயில் நிலையமும் உள்ளன. இரவு நேரத்தில் விதான் சவுதா, நீதிமன்றம், மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுகின்றனர். கடந்த 16ம் தேதி இரவு 7:30 மணிக்கு பவன் என்ற வாலிபர், விதான் சவுதா முன் உள்ள சாலையில் நின்று, விதான் சவுதாவின் மின்விளக்கு அலங்காரத்தை பார்த்துக் கொண்டு இருந்தார். அங்கு வந்த நான்கு பேர், பவனிடம் கத்தியை காட்டி மிரட்டியும், அவரை தாக்கியும் 9,000 ரூபாய் ரொக்கம், மொபைலை பறித்துச் சென்றனர். இதுகுறித்து பவன் அளித்த புகாரில் விதான் சவுதா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அன்றைய தினம் இரவே விதான் சவுதா முன் உள்ள சாலையில், நேபாளத்தை சேர்ந்த 40 வாலிபர்கள் இரு பிரிவாக பிரிந்து, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று தடியடி நடத்தி, வாலிபர்களை விரட்டி அடித்தனர். இந்த இரு சம்பவங்களும் விதான் சவுதா அருகிலேயே மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.