உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மக்கள் ஆக்ரோஷம் யாத்திரை ஆளுங்கட்சிக்கு எதிரான அலையை எழுப்புமா?

மக்கள் ஆக்ரோஷம் யாத்திரை ஆளுங்கட்சிக்கு எதிரான அலையை எழுப்புமா?

விலை உயர்வு விஷயத்தை அஸ்திரமாக பயன்படுத்தும் பா.ஜ., 'மக்கள் ஆக்ரோஷம்' என்ற பெயரில், காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டம் ஆளுங்கட்சிக்கு எதிரான அலையை எழுப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆட்சியில் உள்ள கட்சி மீது, மக்களுக்கு கோபம் எழும்படி செய்து எதிர்க்கட்சிகளின் அரசியல் தந்திரங்களில் ஒன்றாகும். இது மாநில அரசியல் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் சகஜமான விஷயமாகும்.எந்த கட்சி ஆட்சி இருந்தாலும், ஆட்சி காலம் முடியும் தருவாயில், ஆளுங்கட்சிக்கு எதிரான அலை எழுந்தால், அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது கஷ்டம். தோற்று ஆட்சியை இழந்த உதாரணங்களே அதிகம்.இதே காரணத்தால், அரசின் நிர்வாக தோல்வி, ஊழல் உட்பட பல விஷயங்களில் மக்களின் கோபத்துக்கு துாபம் போட்டு, ஆளுங்கட்சிக்கு எதிரான அலையை உருவாக்குவது, எதிர்க்கட்சிகளின் வழக்கமாகும். அரசுக்கு எதிராக எழும் குற்றச்சாட்டுகளை அஸ்திரமாக பயன்படுத்தும். கடந்த 2013ல் பா.ஜ., ஆட்சியை பறிகொடுக்க இதுவே காரணமாக இருந்தது. உட்கட்சி பூசலால் ஐந்தாண்டுகளில் மூன்று முதல்வர்கள் மாறினர். சில அமைச்சர்களின் மீது, ஊழல் குற்றச்சாட்டு இருந்தது. இதை பயன்படுத்தி காங்கிரஸ், ஆளுங்கட்சிக்கு எதிரான அலையை எழுப்பியது. சட்டவிரோத சுரங்கத்தொழிலை கண்டித்து, பல்லாரி வரை பாதயாத்திரை நடத்தியது. இது ஆளுங்கட்சிக்கு எதிரான அலையை அதிகரித்தது.கடந்த 2018ல் ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு எதிரான அலையை அதிகரிக்க எதிர்க்கட்சிகள் முயற்சித்தன. இது அவ்வளவாக பயன் அளிக்கவில்லை என்றாலும், காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவதை தடுப்பதில், எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றன.அடுத்து வந்த 2019 லோக்சபா தேர்தலில், கர்நாடகாவின் 28 தொகுதிகளில், ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று, கடுமையான பின்னடைவை சந்தித்தது. இதற்கு அன்றைய காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசுக்கு எதிரான அலையே முக்கிய காரணமாக இருந்தது.கூட்டணி அரசுக்கு பின், ஆட்சிக்கு வந்த பா.ஜ.,வாலும், தன் ஆட்சி கால இறுதியில் ஆளுங்கட்சிக்கு எதிரான அலையை தடுக்க முடியவில்லை. 2023 தேர்தலில், காங்கிரசிடம் ஆட்சியை பறி கொடுத்தது. 2024 லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலையை உருவாக்க, எதிர்க்கட்சிகள் போராடின. ஆனால் வலுவான அஸ்திரங்கள் கிடைக்காததால், முயற்சி பலன் அளிக்கவில்லை.இன்றைய முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன.எதிர்க்கட்சி பா.ஜ., இப்போதிருந்தே, ஆளுங்கட்சிக்கு எதிரான அலையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. விலை உயர்வை கண்டித்து, 'மக்கள் ஆக்ரோஷம்' யாத்திரையை பா.ஜ., துவக்கியுள்ளது. மாவட்ட வாரியாக யாத்திரை போராட்டம் நடத்தி வருகிறது. இந்த யாத்திரை எந்த அளவுக்கு, ஆளுங்கட்சிக்கு எதிரான அலையை உருவாக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. கர்நாடகாவில் பல வரிகள், கட்டணங்கள் உயர்த்தப்பட்டு, மக்கள் கஷ்டத்தை அனுபவித்தாலும், இலவச திட்டங்களின் வாயிலான பலனை பெறுகின்றனர். வளர்ச்சி திட்டங்கள் மூலமாக, மக்களை சென்றடையாத அரசு, வாக்குறுதி திட்டங்கள் மூலம், வீடு வீடாக சென்றடைகிறது. இது, அரசுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கலாம். தற்போது கர்நாடகாவில் ஆளுங்கட்சிக்கு குடைச்சல் கொடுக்க, எதிர்க்கட்சிகள் பா.ஜ., - ம.ஜ.த., கைகோர்த்துள்ளன. ம.ஜ.த., தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக உள்ளது. இவ்விரு கட்சிகளும் ஒற்றுமையாக செயல்பட்டால், காங்கிரசை நடுங்க வைக்கலாம். ஆளுங்கட்சிக்கு எதிரான அலையை உருவாக்குவது கஷ்டமான விஷயம் அல்ல.விலை உயர்வு அஸ்திரத்தை சரியாக பயன்படுத்தலாம். ஒவ்வொரு அமைச்சர்கள் விவாதங்களில் சிக்குவது, முதல்வர் பதவிக்கு, அமைச்சர்கள் இடையே ஏற்பட்டுள்ள பனிப்போர் போன்ற விஷயங்களை, மக்களின் கவனத்துக்கு எதிர்க்கட்சிகள் கொண்டு சென்றால், ஆளுங்கட்சிக்கு எதிரான அலையை அதிகரிக்கலாம் என்பது, பா.ஜ.,வின் எண்ணமாகும். இதற்கிடையே ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை, அமைச்சரவையில் தாக்கல் செய்து, தேன்கூட்டில் அரசு கை வைத்துள்ளது. ஆளுங்கட்சியில் உள்ள ஒக்கலிக, லிங்காயத் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களே எரிச்சல் அடைந்துள்ளனர்.தானாகவே பிரச்னையை காங்கிரஸ் அரசு இழுத்து விட்டு கொண்டது. இதை எதிர்க்கட்சிகள் எப்படி பயன்படுத்துகின்றன என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி