| ADDED : நவ 19, 2025 09:10 AM
பெங்களூரு: 'போக்சோ' வழக்கில் விசாரணையை எதிர்த்த பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. உதவி கேட்டு சென்ற 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா, 82, மீது பெங்களூரு சதாசிவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையை துவக்கியுள்ள நீதிமன்றம், விசாரணைக்கு ஆஜராக எடியூரப்பா, அவரது ஆதரவாளர்கள் அருண், மரிசாமி, ருத்ரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து எடியூரப்பா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதி அருண் விசாரித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீது நேற்று தீர்ப்பு கூறப்படும் என்று அறிவித்திருந்தார். நேற்று தீர்ப்பு கூறிய நீதிபதி அருண், அரசு தரப்பு வாதங்களை ஏற்று, எடியூரப்பா தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தார். எடியூரப்பா உட்பட 4 பேரும், டிசம்பர் 2ம் தேதி, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டார்.