உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காயத்ரி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் இளம் பெண் உடல்

காயத்ரி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் இளம் பெண் உடல்

காயத்ரி நகர்: அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்த 25 வயது பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் காயத்ரி நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு காயத்ரி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக, நேற்று முன்தினம் அக்கம் பக்கத்தினர் சுப்ரமண்யநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, துாக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் பெண்ணின் உடல் காணப்பட்டது. பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து சுப்ரமண்யநகர் போலீசார் நேற்று கூறியதாவது: துாக்கில் தொங்கிய பெண், தாவணகெரே மாவட்டத்தை சேர்ந்த சுப்ரியா, 25. எம்.பி.ஏ., பட்டதாரி. இவர் வாடகை வீட்டில் தனியாக இருந்து உள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் தங்கியிருந்த வீட்டின் கதவு, உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இறப்புக்கான காரணம் குறித்து கடிதம் ஏதும் கிடைக்கவில்லை. தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே, உண்மை நிலவரம் தெரிய வரும். எனவே, இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இறந்து பல நாட்கள் ஆனதால் துர்நாற்றம் வீசியுள்ளது. சுப்ரியாவின் மொபைல் போன் கைப்பற்றப்பட்டு தடயவியல் அறிவியல் ஆய்வத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. அடுத்த கட்ட விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ