உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சிப் தயாரிப்பு சாதன ஏற்றுமதி கோவையில் இருந்து துவக்கம்

சிப் தயாரிப்பு சாதன ஏற்றுமதி கோவையில் இருந்து துவக்கம்

கோவை:நாட்டிலேயே முதல்முறையாக, கோவையில் இருந்து சிப் ஆலையில் பயன்படுத்தப்படும் 'வெரோதெர்ம் பார்மிக் ஆசிட் ரீபுளோ' எனப்படும் முக்கிய சாதனத்தின் ஏற்றுமதியை 'யீல்டு இன்ஜினியரிங்' நிறுவனம் துவங்கி உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட யீல்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனம், உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்தாண்டு செப்டம்பரில், கோவை சூலுாரில் தனது தயாரிப்பு ஆலையை துவங்கியது. இந்நிலையில், சிப் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சாதனத்தை உருவாக்கி, ஏற்றுமதியை துவங்கி உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் எச்.பி.எம்., எனப்படும் உயர் அலைவரிசை நினைவகம், அதிவேக கம்யூட்டிங் அப்ளிகேஷன் ஆகியவற்றுக்கான சிப் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இந்த சாதனம், இந்தியாவில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட நவீன சிப் தயாரிப்பு சாதனம் ஆகும். இதுகுறித்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்ததாவது: யீல்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் ஆலையில் இருந்து சிப் தயாரிப்பிற்காக முக்கிய சாதனம் ஏற்றுமதி செய்யப்படுவது, இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் முக்கியமான முன்னேற்றம் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.-ராஜா, தொழில்துறை அமைச்சர்

பல்வேறு சவால்களுக்கு மத்தியில், உலகளாவிய சிப் மையமாக மாறும் இலக்கை நோக்கி தமிழகம் உறுதியாக பயணித்து வருகிறது. அதன் காரணமாகவே, 2025---26ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் முதலீட்டில், சூலுார் மற்றும் பல்லடத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி பூங்கா அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ