| ADDED : ஜூன் 03, 2026 02:10 AM
கோவை: பருத்தி இறக்குமதி மீதான 11 சதவீத வரி விலக்குக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜவுளி தொழில்துறையினர், அதை நிரந்தரமாக்க, வேண்டுகோள் விடுத்துள்ளனர். சைமா தலைவர் துரை பழனிசாமி, பருத்தி ஜவுளி ஏற்றுமதி கழக (டெக்ஸ்புரோசில்) துணை தலைவர் ரவி சாம், இந்திய ஜவுளி சம்மேளன (சிட்டி) தலைவர் அஸ்வின் சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பருத்தி இறக்குமதி மீதான 11 சதவீத வரி ரத்து செய்யப்பட்டதை வரவேற்கிறோம். இதனால், பருத்தி ஜவுளி ஏற்றுமதி மீள்வதற்கு சாதகமான சூழல் உள்ளது. ஐரோப்பாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஊக்கமளிக்கிறது. வரும் அக்., 31 வரை பருத்தி இறக்குமதி மீதான 11 சதவீத வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவி லக்கு ஆண்டுதோறும் ஒவ்வொரு முறையும் கோரிக்கை விடுத்து பெறும் நிலையில் உள்ளது. ஆனால், வரிவிலக்கு காலம் முடிந்ததும், 11 சதவீத இறக்குமதி வரியால், விலையில் போட்டி தன்மையை இழக்கும் சூழல் உள்ளது. அதற்கு பதிலாக, பருத்தி மகசூல், தேவை, இறக்குமதி என விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் கொடுத்துள்ளோம். 5,659 கோடி ரூபாய் மதிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள பருத்தி இயக்க திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். வீரிய விதையில் துவங்கி, இயந்திர மய பருத்தி அறுவடை வரை துரிதப்படுத்த வேண்டும். பருத்திக்கு தற்காலிக வரி விலக்கை, சீசன் அல்லாத காலங்களில் தொழில்துறையினர் பயனடையும் வகையில் நிரந்தரமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். அக்., 31க்கு பிறகு பருத்தி இறக்குமதி வரி அமலானால், போட்டித்தன்மை பாதிக்கும் ரூ.5,659 கோடி பருத்தி இயக்க திட்டங்களை விரைவுபடுத்த வலியுறுத்தல்.