ஐ.டி., பங்குகள் ஆறுதல் தந்த அறிவிப்பு
க டந்த சில வர்த்தக தினங்களாக பெரும் சரிவுடன் வர்த்தகமாகி வந்த ஐ.டி., நிறுவன பங்குகள், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கடும் விற்பனை அழுத்தத்தை சந்தித்தன. அன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 5 சதவீதத்துக்கும் மேல் சரிந்த 'நிப்டி ஐ.டி.,' குறியீடு, நேற்று காலை வர்த்தக துவக்கத்தின்போது 2.2 சதவீதம் உயர்ந்து 30,707 என்ற நிலையில் வர்த்தகமானது. வர்த்தக முடிவில் 1.57 சதவீத ஏற்றத்துடன் 30,526 என்ற புள்ளியில் நிறைவடைந்தது. 'நிப்டி ஐ.டி.,' குறியீட்டில் உள்ள 10 பங்குகளில் 9 பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. குறிப்பாக, 'ஹெச்.சி.எல்., டி.சி.எஸ்., மற்றும் ஓ.எப்.எஸ்.எஸ்.,' பங்குகளின் விலை தலா 2 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து வர்த்தகமானது. அமெரிக்காவின் 'ஆந்த்ரோபிக்' நிறுவனம், தனது புதிய ஏ.ஐ., தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்த போவதாக அறிவித்துள் ளது. இதனால், 'ஏ.ஐ., தொழில்நுட்பம்' தற்போதைய ஐ.டி., நிறுவனங்களின் வர்த்தகத்தை பறித்துவிடுமோ என்ற அச்சம் நீங்கி, ஒத்துழைப்புக்கான வாய்ப்பு அதிகரித்து உள்ளது. இதுவே, நேற்றைய ஐ.டி., பங்குகளின் விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல், அமெரிக்காவின் 'நாஸ்டாக் 100' குறியீடு ஒரே நாளில் ஒரு சதவீதத்துக்கும் மேல் உயர்ந்ததும் நேற்று 'நிப்டி ஐ.டி.,' குறியீடு உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. நிபுணர்கள் கருத்து பெரும்பாலான முதலீட்டாளர்கள் இன்னும் இந்திய ஐ.டி., பங்குகள் மீது முழு நம்பிக்கை கொள்ளவில்லை. ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் ஏற்படும் வேலைவாய்ப்பு மாற்றங்கள் குறித்த கவலை இன்னும் இருப்பதால், குறைந்த விலையில் ஐ.டி., பங்குகள் கிடைத்தாலும், பல முதலீட்டாளர்கள் 'வெயிட் அண்டு வாட்ச்' கொள்கையையே கடைபிடிக்கின்றனர்.