கிரெடிட் கார்டு அபராதங்களை உயர்த்தியது எஸ்.பி.ஐ.,
'எஸ் .பி.ஐ., கிரெடிட் கார்டு' வாடிக்கையாளர்கள், தங்களின் நிலுவைத் தொகையை செலுத்துவதில் தாமதம் செய்தால் வசூலிக்கப்படும் தாமதக் கட்டணங்களை எஸ்.பி.ஐ., கார்டு நிறுவனம் உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு 2026, மே 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக, குறைந்தபட்ச நிலுவைத் தொகையை கூட செலுத்தாதவர்களுக்கு இந்த கட்டணங்கள் பொருந்தும். புதிய அறிவிப்பின்படி, 101 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரையிலான நிலுவைத் தொகைக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன், 101 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான நிலுவைத் தொகைக்கு தாமதக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. தற்போது 100 ரூபாய் தாமதக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.