மியூச்சுவல் பண்டு வளர்ச்சி தாங்கி பிடித்த எஸ்.ஐ.பி.,
க டந்த ஆண்டில், மியூச்சுவல் பண்டு துறையில் இதுவரை இல்லாத அளவாக 14 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக 'ஆம்பி' எனும் இந்திய மியூச்சுவல் பண்டுகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு 81 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு, குறிப்பாக எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்ததே இதற்கு காரணம் என ஆம்பி கூறியுள்ளது. 2024ம் ஆண்டில் 67 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு, 2025ம் ஆண்டின் நவம்பர் வரை 21 சதவீதம் உயர்ந்து 81 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. சிறு முதலீட்டாளர்களின் விருப்பமான எஸ்.ஐ.பி., முதலீடு மட்டும் இந்த ஆண்டில் 3 லட்சம் கோடி ரூபாயை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. குறிப்பாக, கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 29,529 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் கிட்டதட்ட 3.36 கோடி புதிய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டு திட்டங்களில் இணைந்துள்ளனர். பொருளாதார நிச்சயமற்ற சூழல்களால் தங்கம் சார்ந்த பண்டுகளில் முதலீடு அதிகரித்துள்ளது என்றும், இதன் சொத்து மதிப்பு 44,595 கோடி ரூபாயிலிருந்து 1.10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் ஆம்பி கூறியுள்ளது. மொத்த சொத்து மதிப்பு: ரூ.81 லட்சம் கோடி (21% உயர்வு) 2025ல் புதிய முதலீடு: ரூ. 14 லட்சம் கோடி புதிய முதலீட்டாளர்கள்: 3.36 கோடி பேர் 2025ல் எஸ்.ஐ.பி., முதலீடு: ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகம் தங்கம் சார்ந்த பண்டுகள் மதிப்பு: ரூ1.10 லட்சம் கோடி அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வெளியேறினாலும், இந்திய முதலீட்டாளர்களின் தொடர் எஸ்.ஐ.பி., முதலீடுகள் சந்தையை வலுவாக தாங்கி பிடிக்கின்றன. குறிப்பாக, நடுத்தர நகரங்களில் இருந்தும், இளைஞர்களிடமிருந்தும் முதலீடு அதிகரிப்பது ஆரோக்கியமான அறிகுறி. - வெங்கட் சலாசனி தலைமை செயல் அதிகாரி, ஆம்பி