மேலும் செய்திகள்
20 சதவீதம் உயர்ந்த ஏ.ஐ., நிறுவன பங்குகள்
19-Feb-2026
இந்திய பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக நேற்று ஏற்றத்தில் முடிந்தன. சென்செக்ஸ் 567 புள்ளிகள் உயர்ந்து, 76,070 புள்ளிகளிலும்; நிப்டி 172 புள்ளிகள் அதிகரித்து , 23,581 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. குறிப்பிட்ட சில துறைகளில் காணப்பட்ட வலுவான போக்கு, சந்தை ஏற்றத்துக்கு காரணமாக அமைந்தது. இருப்பினும், சந்தை முதலீட்டாளர்களின் செயல்பாடுகளில் இன்னும் ஒருவித எச்சரிக்கை உணர்வு காணப்படுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, சந்தையின் ஏற்ற இறக்கத்தை குறிக்கும் 'இந்தியா வி.ஐ.எக்ஸ்., குறியீடு' , 8 சதவீதம் குறைந்து, 20க்கும் குறைவான நிலைக்கு வந்துள்ளது சந்தைக்கு சாதகமான விஷயம் என, 'லைவ்லாங் வெல்த்' நிறுவனத்தின் நிறுவனர் ஹரிபிரசாத் தெரிவித்துள்ளார். கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கிய நிலையில், 'ஏ.சி.,' தயாரிப்பு துறையை சேர்ந்த 'வோல்டாஸ், ப்ளூஸ்டார், பி.ஜி., எலக்ட்ரோபிளாஸ்ட்' உள்ளிட்ட நிறுவன பங்குகள், நேற்று 2 சதவீதம் வரை உயர்ந்தன. தொடர்ந்து நான்கு நாட்களாக இறங்குமுகத்தில் இருந்த பாதுகாப்பு துறை பங்குகள், நேற்று 8 சதவீதம் வரை உயர்ந்தன. 'நிப்டி இந்தியா டிபென்ஸ்' குறியீடு 1.86 சதவீதம் உயர்ந்தது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள வான்வழி தாக்குதல்கள் மற்றும் எல்லை பதற்றங்கள், இந்த துறை மீதான கவனத்தை அதிகரித்து உள்ளன. அதேநேரம், அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித கொள்கை குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை குறித்த கவலை காரணமாக, 'நிப்டி ஐ.டி., குறியீடு' ஒரு சதவீதம் வரை சரிந்தது. ஏற்றத்தில் எம்.சி.எக்ஸ்., இந்தியாவின் கமாடிட்டி சந்தையான எம்.சி.எக்ஸ்., நிறுவன பங்குகள் நேற்று 5 சதவீதம் வரை உயர்ந்து, அதன் வரலாற்று உச்சமான 2,706 ரூபாய்க்கு மிக அருகில் முடிந்தன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்நிறுவன பங்கு 17 சதவீத லாபத்தை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. கடந்த டிச., காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 121 சதவீதம் அதிகரித்துள்ளது; தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் நிலவும் ஏற்ற இறக்கங்களால் வர்த்தகம் பெருமளவு உயர்ந்துள்ளது உள்ளிட்டவையே, இந்நிறுவன பங்குகள் ஏற்றத்துக்கு காரணமாக கூறப்படுகின்றன. பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் 6% உயர்வு 'பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ்' நிறுவனம், பிரபல வீட்டு உபயோக பொருட்கள் பிராண்டான 'மார்பி ரிச்சர்ட்ஸ்' நிறுவனத்தின் இந்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான அறிவுசார் சொத்துரிமை மற்றும் வர்த்தக உரிமைகளை 141.4 கோடி ரூபாய்க்கு முழுமையாக வாங்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக உரிமம் பெற்று நடத்தி வந்த பிராண்டை இப்போது சொந்தமாக்கியுள்ளது. இது நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் ஒரு பலமான கண்ணுக்கு தெரியாத சொத்தாக மாறும் என, முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். இதன்காரணமாக, நேற்று இந்நிறுவன பங்குகள் 6 சதவீதம் வரை உயர்ந்தன.
19-Feb-2026