துாத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்
சென்னை:துாத்துக்குடியில், 'சிப்காட்' நிறுவனம் கடல் நீரை, குடிநீராக்கும் ஆலை அமைக்க உள்ளது. இதை செயல்படுத்த, பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. துாத்துக்குடி மாவட்டத்தில், 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனத்துக்கு தொழில் பூங்காக்கள் உள்ளன. அங்கு, பல்வேறு தொழில் நிறுவனங்களின் ஆலைகள் செயல்படுகின்றன. தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வினியோகிக்க, துாத்துக்குடி முள்ளக்காட்டில் தினமும், 6 கோடி லிட்டர் கடல் நீரை, குடிநீராக மாற்றும் கொள்ளளவில் ஆலை அமைக்க சிப்காட் முடிவு செய்துள்ளது. திட்ட செலவு, 904 கோடி ரூபாய். இத்திட்டத்தை செயல்படுத்த, பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:முதல்முறையாக அரசு, தனியார் இணைந்து கடல் நீரை, குடிநீராக்கும் ஆலை அமைக்க கடந்த ஜூனில், 'டெண்டர்' கோரப்பட்டது.டெண்டர் சந்தேகத்தை விளக்கும் கூட்டத்தில், 20 நிறுவனங்கள் பங்கேற்றன. அவை சில சந்தேகங்களை எழுப்பின. அவற்றுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. டெண்டரில் அதிக நிறுவனங்கள் பங்கேற்றால், போட்டி ஏற்பட்டு குறைந்த விலைப் புள்ளி கிடைக்கும். எனவே, அதிக நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில், ஆக., இறுதியில் இருந்த கடைசி நாள் இம்மாதம், 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.