உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / புதிய உச்சத்தில் கோதுமை உற்பத்தி

புதிய உச்சத்தில் கோதுமை உற்பத்தி

புதுடில்லி, நடப்பாண்டில், இந்தியாவின் கோதுமை உற்பத்தி 11.5 கோடி டன்னாக இருக்கும் என்றும் இது ஒரு புதிய உச்சமாக இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது-. கோதுமை உற்பத்தியில் சரிவு ஏற்படும் என்ற அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நடப்பாண்டில் கோதுமை உற்பத்தி 11.54 கோடி டன்னாக இருக்கும் என மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது அரசின் இலக்கான 11.50 கோடி டன்னை விட அதிகமாகும். கடந்த பயிர் ஆண்டான 2023 - 24ன் ஜூலை முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இருந்த 11.33 கோடி டன்னை விடவும் இது அதிகமாகும். மேலும், 2024 - 25ம் ஆண்டில், காரீப் மற்றும் ராபி பருவ மொத்த உணவு தானியங்கள் உற்பத்தி 5 சதவீதம் அதிகரித்து, 33.09 கோடி டன்னாக இருக்கும். இதில் காரீப் பயிர்கள் 16.64 கோடி டன்னாகவும்; ராபி பயிர்கள் 16.45 கோடி டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இரு பருவங்களிலும் ஒப்பிடத்தக்க உணவு தானிய உற்பத்தி 31.56 கோடி டன்னாகும்.பருவகால பயிர்களுக்கான உற்பத்தி அளவுகளை, அவற்றின் சந்தை வரவின் அடிப்படையில் மத்திய அமைச்சகம் மதிப்பீடு செய்கிறது.

'சான்றிதழ் அவசியம்'

அரிசி ஏற்றுமதிக்காக, அரசின் ஏற்றுமதி ஆய்வு கவுன்சிலிடம் சான்றிதழ் பெற வேண்டியது, ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என, மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது. பாசுமதி மற்றும் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு, இ.ஐ.சி., எனப்படும் ஏற்றுமதி ஆய்வு கவுன்சிலிடமிருந்து சான்றிதழ் தேவை. இது, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், பிரிட்டன், ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். பிற ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதிக்கு, இதில் இருந்து ஆறு மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை