உலகின் மிகப்பெரிய தயிர் ஆலை கோல்கட்டாவில் அமைக்கிறது அமுல்
புதுடில்லி:இந்தியாவின் பால் பொருள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அமுல் நிறுவனம், 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலகின் மிகப்பெரிய தயிர் உற்பத்தி ஆலையை கோல்கட்டாவில் அமைக்கிறது. நாட்டின் முன்னணி பால், பால் பொருட்கள் விற்பனை நிறுவனமான அமுல், மேற்கு வங்கத்தில் சமீபத்தில் அண்மையில் நடந்த உலகளாவிய வணிக உச்சி மாநாட்டில், தன் புதிய திட்டத்தை அறிவித்தது. இது குறித்து, அந்நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஒருங்கிணைந்த பால் பொருட்கள் ஆலையை அமைக்க உள்ளோம். இந்த ஆலை, ஒரு நாளைக்கு 10 லட்சம் லிட்டர் தயிர் உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கும். இதற்காக, ஒரு நாளில் 15 லட்சம் லிட்டர் பாலை கையாளும் திறன் கொண்டதாகவும் இருக்கும். கோல்கட்டா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தயிருக்கு அதிக தேவை உள்ளது. குறிப்பாக, புதிய ஆலை 'டோக் டோய்' எனப்படும் புளிப்பு தயிர் மற்றும் 'மிஷ்டி டோய்' எனப்படும் இனிப்பு தயிர் போன்ற பிரபலமான உள்ளூர் வகை தயாரிப்புகளை வழங்கும். அத்துடன் மேற்கு வங்கத்தில் அமுலின் இருப்பை புதிய ஆலை வலுப்படுத்தும். இவ்வாறு அமுல் தெரிவித்துள்ளது.