ஆய்வு கட்டணம் தள்ளுபடியால் கடனுக்கு குவிந்த விண்ணப்பங்கள்
சென்னை,:தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கு பெறப்பட்ட ஆய்வு கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டதால், தமிழக அரசின், 'டிக்' நிறுவனம் கடந்த மாதம் நடத்திய முகாமில், 540 நிறுவனங்கள், 800 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளன. தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில், புதிய தொழில் துவங்கவும், ஏற்கனவே உள்ள தொழிலை விரிவாக்கம் செய்யவும், 'டிக்' எனப்படும் தமிழக தொழில் முதலீட்டு கழகம் கடன் வழங்குகிறது. ஆண்டுக்கு சராசரியாக, 1,000 நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் கடனுக்கு, ஆய்வு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இது, கடன் தொகையை பொறுத்து, 5,000 ரூபாய் முதல், 10 லட்சம் ரூபாய் வரை இருந்தது. இதனால், நிறுவனங்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, நடப்பு நிதியாண்டில் கடனுக்கான ஆய்வு கட்டணத்தை முழுதுமாக தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. இந்த சலுகையை தொழில்முனைவோரிடம் தெரிவித்து, எளிதாக கடன் வழங்குவதற்கு, கடந்த மாதம் மாநிலம் முழுதும் டிக் கிளைகள், 'சிட்கோ, சிப்காட்' நிறுவனங்களின் தொழிற்பேட்டை, தொழில் பூங்காக்கள், கலெக்டர் அலுவலகங்களில் கடன் சிறப்பு முகாமை, 'டிக்' நடத்தியது. இதன் வாயிலாக ஒரே மாதத்தில், 540 நிறுவனங்கள், 800 கோடி ரூபாய்க்கு கடன் கேட்டு விண்ணப்பம் செய்துஉள்ளன.