பால் பண்ணை தொழில் துறை 11 ஆண்டில் 70 சதவிகிதம் வளர்ச்சி
ரோத்தக்:நம் நாட்டின் பால் பண்ணை தொழில், கடந்த 11 ஆண்டுகளில் 70 சதவீத வளர்ச்சி கண்டிருப்பதாக மத்திய கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் ரோத்தக் நகரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: உலகின் அதிக வேகமாக வளர்ச்சி பெறும் துறையாக, இந்தியாவின் பால் பண்ணை தொழில் துறை உள்ளது. பிரதமர் மோடியின் கடந்த 11 ஆண்டு ஆட்சியில் இத்துறை 70 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஹரியானாவில் துவங்கப்பட்டுள்ள சபார் பண்ணை, தயிர், மோர், யோகர்ட் ஆகியவற்றின் உற்பத்தி, நாட்டிலேயே அதிகபட்சமாக இருக்கும். 325 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள இந்த பண்ணையில், தினசரி 150 டன் தயிர், 3 லட்சம் லிட்டர் மோர், 10 லட்சம் லிட்டர் யோகர்ட், 10 டன் இனிப்புகள் தயாரிக்கப்படும். நாடு முழுதும் கூட்டுறவு அமைப்புகள் அதிகரிக்கப்படுகின்றன, 2029ம் ஆண்டுக்குள், கூட்டுறவு அமைப்பு இல்லாத ஒரு பஞ்சாயத்து கூட இருக்காது என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அமித் ஷா கூறினார்.