மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப பி.ஓ.எஸ்., சாதனங்கள் இல்லை
மும்பை:மின்னணு பணப்பரிவர்த்தனை நடைமுறைகள், சாதனங்கள் மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்களை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்ததாவது:பணம் செலுத்துவதற்கான நடைமுறைகள் மற்றும் சாதனங்கள் மாற்றுத்திறனாளிகளும் எளிதாக அணுகும் வகையில் இருக்க வேண்டும். அதுதொடர்பாக ஆய்வு செய்து, தேவைப்படும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.'பாயின்ட் ஆப் சேல்' எனப்படும் பணம் செலுத்துவதற்கான பி.ஒ.எஸ்., சாதனங்கள், பார்வை மாற்றுத்திறனாளிகள் எளிமையாக பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் நிர்ணயித்துள்ள தரத்தில், சேவைகள் வழங்கப்பட வேண்டும்.மின்னணு பணப்பரிவர்த்தனைக்கான நடைமுறைகள், சாதனங்களை எளிதாக்கும் அதேவேளையில், பாதுகாப்பு அம்சங்களில் சமரசம் கூடாது. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு மாதத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.